Wednesday, November 22, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...4

2003 மத்தியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அமெரிக்காவில் சுமார் 400,000 எம்ப்ரையோஸ்கள்(embryos) உபரியாக உள்ளது இவை அனைத்தும் தனியார் கருத்தரிப்பு நிலையங்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. முதலில் இவ்வளவு எம்ப்ரையோஸ் உபரியானதன் காரணம் என்னவென்று பார்ப்போம்.

இயற்கையாக கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லாத தம்பதியினருக்காக செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க செய்து பின்னர் அதை பெண்ணின் உடலில் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்ள உதவுவதே கருத்தரிப்பு நிலையங்களின் பணி. இதற்காக வரும் தம்பதியினரில், பெண்ணுக்கு சில மருத்துவ முறைகள் செய்து அவரிடம் இருந்து தரமான 24 சினை முட்டைகளை எடுப்பர். பின்னர் ஆணிடமிருந்த பெறப்பட்ட விந்தணுவின் மூலமாக ஆய்வகத்தில் அந்த 24 முட்டைகளையும் கருத்தரிக்கச் செய்வர். மூன்று நாட்களுக்கு பிறகு 24 எம்ப்ரையோஸ் ரெடி. அதிலிருந்து ஒரு 4 எம்ப்ரையோஸ்களை எடுத்து பெண்ணின் கருப்பைக்குச் செலுத்துவர். நான்கு எம்ப்ரையோஸ்களில் ஏதாவது ஒன்று குழந்தையாக அல்லது 2 இரட்டைக் குழந்தையாக மாறும். மிச்சமுள்ள எம்ப்ரையோஸ்களை எதிர்கால தேவைக்காக உடனடியாக திரவ நைட்ரஜனில் மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பாக சேமிப்பர்.

அப்படி முதல்முறை செலுத்தப்பட்ட எம்ப்ரையோஸ்கள் சிலபல காரணங்களால் குழந்தையாக மாறாவிட்டாலோ, அல்லது இரண்டாவது குழந்தை வேண்டுமென்று நினைத்தாலோ, சேமித்து வைக்கப்பட்ட எம்ப்ரையோஸ்களிலிருந்து ஒரு 4 எடுத்து மறுபடியும் பெண்ணின் உடலில் செலுத்துவர். இந்த செய்முறைகளின் போது சில எம்ப்ரையோஸ்கள் அழிந்து போகும் வாய்ப்பும் உண்டு. எப்படி பார்த்தலும் 16 முதல் 20வது எம்ப்ரையோஸ்கள் வரை உபரியாகவிடுகின்றன. இப்படி உபரியாவதை சில கருத்தரிப்பு நிலையங்கள் பத்திரமாக பாதுகாக்காமல் முதலிலேயே அழித்துவிடுகின்றன. சில பெற்றோர் பத்திரமாக கருத்தரிப்பு நிலையங்களின் உதவியுடன் பாதுகாத்து வருகின்றனர்.

இப்படி மிச்சமடைந்த 400,000 எம்ப்ரையோஸ்கள் தான் இப்போது அமெரிக்காவின் தலைவலி.
இவ்வளவு எம்ப்ரையோஸ்களை அழிப்பதா? அல்லது ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அளிப்பதா? இல்லை தத்து கொடுப்பதா? இது தான் மக்கள் முன்னுள்ள கேள்வி.
குழந்தையில்லா மற்ற பெற்றோருக்கு எம்ப்ரையோஸ்களை தத்து கொடுக்கலாமென்றால், அதை பெறுவதிற்கு மக்கள் மனதில் விருப்பமில்லை. தமக்கு சம்பந்தமே இல்லாத குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. தவிர அவர்கள் தன்னுடைய எம்ப்ரையோஸ்களை உருவாக்க வ்ழியிருக்கும்போது ஏன் அடுத்தவருடையதை நாட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எனவே இதை அழிக்காமல் ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்கு அளிக்கலாம் என்று ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.

ஆனால் மனித நோய்களை குணப்படுத்த மனித கொல்லமுடியாது என்பது ஒரு பிரிவினரின் வாதம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வாதமும் அதே. ஆம் எம்ப்ரையோஸ் என்பது எதிர்கால மனிதனே, எனவே அதை ஒரு மனித உயிர் போன்றே கருத வேண்டு என்கின்றனர் ஒரு பிரிவினர். ஒரு சிலரோ இது மனிதனுக்கு முந்தைய பருவம் இதை மனிதனாக கருதக்கூடாது, எனவே இதை ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். இதற்கு மட்டும் அரசாங்கம் உதவியளித்தால், எம்ப்ரையோஸ்களிடமிருந்து பெருமளவில் ஸ்டெம்செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு மிகப்பெரியளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் ஏதோ ஒரு மாநில உயர்நீதிமன்றத்தில் எம்ப்ரையோஸ் மனிதனே என்று தீர்ப்பு கூட வந்ததாக கேள்வி.

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், இது வரை எம்ப்ரையோஸ்களிடமிருந்து ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம்செல்களை வேண்டுமானால் ஆராய்ச்சிக்குட்படுத்தலாம். ஆனால் இனி புதிதாக எம்ப்ரையோஸ்களை அழித்து ஸ்டெம் பிரித்தெடுக்க அனுமதியில்லை என்று சொல்லியுள்ளார். இந்த நிபந்தனையுடன் தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அவர் நிதிஉதவி அளித்துள்ளார். மக்க்ளே இதில் நம் பங்கு, ஆராய்ச்சி குறித்த முடிவுகளை அவ்வப்போது தெரிந்து கொள்வதோடு அரசாங்கத்திம் முடிவுக்கும் பொறுமையாக காத்திருப்பதே. இறைவனைத்தவிர அனைத்திற்கும் பதில் கொடுக்கும் வல்லமை பொருந்தியதாக இருப்பது அறிவியல் மட்டுமே.

Monday, November 20, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...3

ஸ்டெம் செல்கள் குறித்து தேட தேட மிக ஆச்சரியமான பல விஷயங்கள் தெரிய வருகின்றன. ஸ்டெம் செல்கள் அதிக அடர்த்தியுடன் காணப்படும் மற்றொரு பொருள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி இரத்தம். ஆம் குழந்தை பிறந்தவுடன் தேவையில்லையென்று அறுத்து அப்புறப்படுத்தபடும் தொப்புள்கொடியில் இருக்கும் இரத்ததிலிருந்து நிறைய ஸ்டெம்செல்களை பிரித்தெடுக்க இயலும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இவ்வகையான ஸ்டெம் செல்கள், எலும்பு மஜ்ஜை மற்றும் வழக்கமான இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கும் ஸ்டெம் செல்களை விட மிகச் சிறந்தது என்றும், இந்த வகை ஸ்டெம் செல்களை உபயோகிக்கும் போது நோயாளியின் செல்கள் பெரும்பாலும் இதை நிராகரிப்பதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த செல்கள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், நோயாளி உடலில் செலுத்தும் போது, நோய்வாய்ப்பட்ட செல்களால், இதனை அறிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் நோய் இந்த செல்களுக்கு பரவுவதில்லை. அதேபோல் முழுவளர்ச்சியில்லாததால், இச்செல்களால் நோயாளிக்கு வேறு எந்த வகையான வியாதியையும் கொண்டு செல்ல இயலாது. எனவே இவ்வகையான செல்கள் மிகவும் பாதுகாப்பானவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபோன்ற தொப்புள்கொடி இரத்தத்தை பாதுகாக்க பல வங்கிகள் இப்போது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தோன்றியுள்ளன. அந்நிறுவனங்களில் குழந்தை பிற்ப்பதற்கு 30 நாட்கள் முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டிய செய்முறையை அவர்கள் நம்முடைய மருத்துவருக்கு அனுப்பிவைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நம் மருத்துவர் தொப்புள் கொடி இரத்தத்தை பாதுகாப்பான முறையில் சேகரித்து அந்நிறுவனத்திற்கு அனுப்புவார். குழந்தை பிறந்த 36லிருந்து 48 மணி நேரத்திற்குள் முறையாக பாதுகாக்கப்பட்ட இரத்தம் அவ்வங்கிக்குச் சென்றடைய வேண்டும். பிறகு அந்த இரத்தம் நீங்கள் விரும்பும் வரை பாதுகாக்கப் படும். இதற்கான செலவு ஆண்டுதோறும் 125 முதல் 150 அமெரிக்க டாலர். இதுதவிர முதல்முறை பதிவுக்கட்டணம் சுமார் 1000 அமெரிக்க டாலர்.

சரி, இப்படி சேகரித்து வைப்பதின் அவசியம் என்ன? உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் பிரச்சனை வந்தாலும் இந்த இரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் பிரித்தெடுத்து வைத்தியம் செய்யலாம். அதுமட்டுமன்றி உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நோய்களையும் தீர்க்க இந்த செல்கள் பெரும்பாலும் உதவுமாம். ஏன் பல சமயங்களில் பெற்றோர்களின் நோய் தீர்க்கவும் இதை பயன்படுத்தலாம். அனைத்திற்கும் மேலாக, இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டெம் செல்கள் எல்லாவகையான உயிர்க்கொல்லி வியாதிகளுக்கும் நிவாரணம் அளிக்கப் போகிறது என்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல பொதுமக்களும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்காக இப்பொழுதே அவர்களின் ஸ்டெம் செல்களை சேகரித்து பாதுகாக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.

இந்த தொப்புள் கொடி இரத்த ஸ்டெம்செல்களில் எந்த சர்ச்சையும் இல்லை. வீணாக குப்பைக்குப் போவதிலிருந்து இதை சேகரிப்பதால், எந்த எதிக்ஸ் மற்றும் மத நம்பிக்கை பிரச்சனையில்லை. மிகவும் எளிதில் சேகரித்து பாதுகாக்க முடியும். மற்றும் இவ்வகை செல்களின் வெர்சாலிடி ஆச்சரியபடும்படி உள்ளதால் இவ்வகை மருத்துவம் மிகவிரைவில் முன்னேற்றம் காணும் என்பது ஆராய்ச்சியாளர் எதிர்பார்ப்பு.

தொடரும்

Friday, November 17, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...2

அமெரிக்காவில் விலங்குக்கான ஸ்டெம் செல் சிகிச்சையும் ஆரம்பித்து விட்டனர். இப்போதைக்கு குதிரைகளுக்கு மட்டும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் நாய்களுக்கும் இச்சிகிச்சையை ஆரம்பிக்கப் போகிறார்களாம். குதிரைகளில் முக்கியமாக பந்தயக் குதிரைகளுக்கு இச்சிகிச்சை மிகவும் பயனளிப்பதாக கூறுகின்றனர். மூட்டு தேய்தல், எலும்புமுறிவு போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வியப்பளிக்கும் வகையில் மிகச்சீக்கிரமாக குணமாகிறதாம்.

நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும், நோய்வாய்ப்பட்ட குதிரையை அருகிலுள்ள வெட்னரி டாக்டரிடம் கூட்டிச் சென்றால், அவர் குதிரைக்கு மயக்க மருந்து அளித்து, அதன் உடம்பிலிருந்து குறிப்பிட்ட அளவு கொழுப்பை எடுத்து, ஸ்டெம்செல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவார். நாட்டில் மிகச்சில ஆய்வுக்கூடங்களே இப்பணியை மேற்கொண்டுள்ளன. அங்கு குதிரையின் கொழுப்பிலிருந்து ஸ்டெம்செல் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் வெட்னரி டாக்டருக்கு அனுப்ப படுகிறது. அவர் அதை குதிரைக்கு சரியான இடத்தில் ஊசி மூலம் ஏற்றுவார். அவ்வளவு தான். குதிரை கொஞ்சநாட்களில் மீண்டும் பந்தயத்திற்கு ரெடி. இதற்கு சராசரியாக ஆகும் செலவு 2000 அமெரிக்க டாலர்கள்.

இதே போன்ற அடல்ட் ஸ்டெம் செல் முறையை மனிதர்களுக்கும் மருத்துவர்கள் அவ்வப்போது பயன்படுத்துகிறார்கள். இச்சிகிச்சை முறை எல்லா நோயளிகளுக்கும் பயனளிப்பதாக இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதைக்கு, இரத்தம் மற்றும் எலும்பு சம்பந்தபட்ட வியாதிகளை குணப்படுத்த அடல்ட் ஸ்டெம் செல் முறையை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் படித்த செய்தி ஜெர்மனியில் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததாலோ/விபத்திலேயோ(சரியாக நினைவில்லை) அவருடை கபாலம் உடைந்து விட்டது. அடல்ட் ஸ்டெம் செல் முறையால் அவருடய கபாலத்தை மருத்துவர்கள் சரி செய்துள்ளனர். ஆனால் மிகப்பெரும் வியாதிகளான, மாரடைப்பு, கேன்சர், சிறுநீரக கோளாறு மற்றும் நீரிழிவு நோய் போன்ற வியாதிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை முறை கட்டாயம் நிரந்தரமாக தீர்வளிக்கும் என்பதும் அதற்கு அடல்ட் ஸ்டெம் செல்களை விட எம்ப்ரையானிக் செல்களே மிகவும் பொருத்தமானது என்பதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

எம்ப்ரையானிக் செல்களை ஆய்வகத்தில் எளிதாக மிகப் பெருமளவில் தயாரிக்க முடியும் என்பதாலும், மற்ற பல மனித உறுப்புகளின் செல்களுக்கு மாற்றாக இருப்பதும் (அடல்ட் செல்கள் சில மனித உறுப்புகளுக்கே மாற்றாக செயல்பட முடியுமாம்) ஆராய்ச்சியாளர்கள் எம்ப்ரையானிக் செல் ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இது குறித்த பல விவரங்கள் பல இணையதளங்களில் உள்ளது.

தொடரும்

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...1

அமெரிக்க தேர்தல் நடந்த வாரம், ஒரு வேட்பாளர் தனக்கு எதிராக போட்டியிடுபவரைக் குறித்து வானொலியில் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மிகப்பெரும் குறையாகச் சொன்ன ஒன்று, எதிர் வேட்பாளர் ஸ்டெம் செல் ஆராய்ச்சியை எதிர்க்கிறார். மக்களே ஸ்டெம் செல் ஆராய்ச்சியை போய் எதிர்ப்பவரை ஆதரிக்கலாமா.. அது இது என்று குற்றம் சாட்டினார்.. சரி அப்படி என்ன தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நடக்கிறது என்று இணையத்தில் மேய்ந்த போது கிடைத்த விஷயங்கள்.

நாம் எல்லாருமே, ஒரே ஒரு செல்லாக இருந்து பல கோடி செல்களாக பிரிந்து முழுமனிதனாக மாறுகிறோம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் ஏதாவது ஒரு பாகம் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட செல்கள் அழிந்து ஆரோக்கியமான செல்கள் உருவாகி அப்பிரச்சனைய போக்குகின்றன. அப்படி நிகழாத போதுதான் மனிதன் நோயாளியாகிறான். எனவே மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் பாதிக்கப்பட்ட செல்களே காரணம். அப்படியென்றால் வியாதியை குணப்படுத்த பாதிக்கப்பட்ட செல்களை சீர் செய்தாலோ, அல்லது அதற்கு பதிலாக ஆரோக்கியமான் செல்களை உருவாக்கினாலோ என்ன என்ற யோசனையின் விளைவு தான் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் ஸ்டெம் செல் ரிசர்ச்.

ஸ்டெம் செல்லுக்கு தன்னைத்தானே நீண்ட காலத்திற்குப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மையும், வேறு மனித உறுப்புகளின் செல்லாக மாற்றிக்கொள்ளும் தன்மையும் உண்டு. சரி இந்த ஸ்டெம் செல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன. முதலில் விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்கள் மனிதனின் எலும்பு மஜ்ஜையில் மட்டுமே இருக்கிறது என்று எண்ணினார்கள், ஆனால் பல வருட ஆராய்ச்சிக்குப்பிறகு, மனிதனின் பல பாகங்களில், பல தசைகளில் இந்த ஸ்டெம் செல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கடைசியாக மனித உடலில் உள்ள கொழுப்பில் அடர்வு மிக்க ஸ்டெம் செல்கள் உள்ளதாகவும், அதனை சுத்திகரித்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்தால் பல நோய்களை குணப்படுத்தலாம் என்பதை கண்டறிந்துள்ளார்கள். இப்படி மனித உடலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஸ்டெம் செல்களை அடல்ட் ஸ்டெம் செல்கள் என்பர்.

அப்படியென்றால் அடுத்த வகை ஸ்டெம்செல் என்ன?....மிகவும் பிரபலமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும் எம்ப்ரையானிக் (embryonic ) ஸ்டெம் செல். இந்த எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் மனிதக்கருவிலிருந்து கரு உருவான எட்டு நாட்களுக்குள் பிரித்தெடுக்கப்படுகிறது. கண்டிப்பாக மனித உடலில் கருத்தரித்த கருவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதில்லை. வெளியே அதற்கென்று உள்ள கருத்தரிப்பு மையங்களில் கரு உருவாக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவரை அப்படி பிரித்தெடுக்கும்போது அம்மனித கரு அழிந்து போகின்றன. எனவே இவ்வாராய்ச்சிக்கு பலத்த எதிர்ப்பும் மக்களிடம் உள்ளது. விஞ்ஞானிகள் கருவிற்கு பாதகம் இல்லாமல், செல்லை பிரித்தெடுக்க இயலும் என்று முழுமையாக நம்புகிறார்கள். அவர்கள் அதற்கான ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். இத்தகய எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்குத்தான் ஜார்ஜ் புஷ்ஷின் அரசாங்கம் பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ளது.

தொடரும்..

Thursday, November 16, 2006

என்னதான் நடக்குது நம்ம ஊருல...

டிசம்பர் மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வரலாம் என்பது என் திட்டம், அதற்கு இரு மாதம் முன்பாகவே என் மனைவியும் குழந்தையும் சென்னைக்குச் சென்றுவிட்டனர். சென்றவுடன், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று... சரி ஜெட்லேக் மற்றும் காலநிலை மாறுதல்களால், வெகுநாள் கழித்து இந்தியா திரும்பும் குழந்தைகளுக்கு வழக்கமாய் ஏற்படும் உபாதைகளாகத்தான் இருக்கும் என எண்ணினேன்... இப்போது மழை வேறு வெளுத்துக்கட்டுகிறதே.

மனைவியுடன் தொலைபேசும் போது அவர் சொன்ன விஷயங்கள் வருத்தம் கலந்த ஆச்சரியம் அளித்தது. என் மனைவி சென்ற மருத்துவமனை/மருத்துவரைக் காண ஏகப்பட்ட நோயாளிகளாம். மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படும் அள்விற்கு, மக்கள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளார்களாம். ஏதேதோ பெயரில் ஜுரம். பெரும்பாலோனோர் வீட்டில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் வீட்டிலேயே இருவருக்கு சிக்கன்-குனியா... ஒருவருக்கு ஏதோ வைரஸ் ஜுரம். போதாக்குறைக்கு மெட்ராஸ்-ஐ வேறு... குழந்தைகளும், முதியவர்களும் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனராம்...

அவர் சொன்ன விஷயங்களை கேட்டவுடன் இங்கே எனக்கே ஜுரம் வந்தது போலாகிவிட்டது... மக்களே முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் நலனை முன்னெச்சரிக்கையுடன் இருந்து காத்துக் கொள்ளவும்

Thursday, November 09, 2006

அமெரிக்காவில் வைத்தியம்

எல்லாம் நல்லாதான்யா இருக்கு இந்த நாட்டுல... டெக்னாலஜியெல்லாம் நல்லாதான் முன்னேறி இருக்கு... ஆனா என்ன வைத்தியம்/வைத்தியரை பார்க்கிறதுதான் உலகமகா பிரச்சனையா இருக்கு.

ஒரு ஜுரம்னு போன் பண்ண, 102 டிகிரிக்கு மேல் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தா போன் பண்ணு இல்லனா டைலினால், மோர்ட்ரின் சாப்புட்டு தூங்குனு சொல்லாறாங்கோ... அப்பா 3 நாளா ஒரே தலவலி, ஜலதோஷம் படுத்துது.. என்னன்ன கொஞ்சம் பாத்து சொல்லுப்பானா... 2 வாரம் கழிச்சி அப்பாயிண்ட்மெண்ட் தராங்கோ... சரி கஷ்டம் தாங்காம அர்ஜண்ட்கேர் போனா, 4 மணி நேரம் காக்க வைக்கிறாங்கோ. என்னடா இது நமக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் டாக்டர பார்த்துட்டு போறாங்கோ.. நம்மல ஏன் இன்னும் கூப்பிடலன... புரியாம போய் கேட்டா, FIFO கான்சப்ட் அர்ஜெண்ட் கேர்ல கடையாது.. நம்மளையும், நம்ம வியாதியையும் பொறுத்து அவங்களுக்கா எப்ப வைத்தியம் பண்ணலாம்னு தோணுதோ அப்பதான் கூப்பிடுவாங்களாம்...

குழந்தைங்க பாடு இன்னும் கொடுமை... குழந்தைக்கு சளி புடிச்சா இங்க மருந்தே இல்ல.. ஏதோ பார்மசில கவுண்ட்டர்ல விக்கிரத வாங்கி ஊத்த சொல்லறாங்கோ.. நம்ம புள்ளக அத ஒரு ஸ்பூன் குடிச்சிட்டு இன்னும் தான்னு அடம்புடிக்குதுங்கோ..அது ஏதோ ஜூசு மாதிரி இருக்குது... பாட்டில் காலி ஆகுரது தான் மிச்சம்.. சளி அதுவா மனசு வச்சு புள்ளய விட்டு போனாதான் ஆச்சு...

அப்பா புள்ள காலைலிருந்து வாந்தி எடுக்குது.. கொஞ்சம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கோனு போன் பண்ணா, புள்ள தண்ணி குடிக்குதா.. ஒன்னுக்கு போகுதா.. அப்ப சரி.. நாளைக்கு வரைக்கும் வாந்தி நிக்கலனா போன் பண்ணுங்கோ பார்க்கலாம்னு சொல்றாங்கோ... அப்போ நாளை வரைக்கும், புள்ள வாந்தி எடுக்கிறத பார்த்துக்கிட்டா உக்கார முடியும்.

எந்த வியாதிக்கும் அவ்வளவு சீக்கிரம் மருந்தே கொடுக்க மாட்டேங்குறாங்கோ... எல்லாம் தானா சரியாபோகணும்... பாடி ரெசிஸ்டன்ஸ் இருக்கணும்னு எல்லா வியாதியும் முத்தி போன பிறகு தான் பிரிஸ்கிரிப்ஷனையே தொடராங்கோ... ஒரு ஆண்டிபயாடிக் கொடுக்குறதுக்கு ஏதோ Atom பாம் தர மாதிரி யோசிச்சு ப்ரிஸ்கிரைப் பண்றாங்கோ... இது நல்ல விஷயமா கூட இருக்கலாம் ஆனா அதுவரைக்கும் வியாதில அவஸ்தை படபோறது நாம தான்... அதிலும் குழந்தைங்க கஷ்டபடறது தாங்க முடியல....

அடுத்த பிரச்சனை இந்த இன்ஷுரன்ஸ்... எத்தன தடவ படிச்சாலும் புரியவே கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு இந்த கவரேஜ் டீடெய்ல்ஸ் எழுதி வச்சியிருப்பாங்க... ஏதாவது பிரச்சனைனா உடனே டாக்டர் கிட்ட போரத விட்டுட்டு, இது இன்ஷுரன்ஸ்ல கவர் ஆகுமா ஆகாதானு உக்காந்து ரிசர்ச் பண்ணனும்... இப்படித்தான், ஒரு டாக்டர் பேச்ச நம்பி இன்ஷுரன்ஸ்ல கவர் ஆகும்னு நினைச்சி ஒரு சின்ன மைனர் சர்ஜரி பண்ணிகிட்டேன்.. கடைசில இது கவர் ஆகாதுன்னு சொல்லி $2000 தலைல கட்டிட்டாங்கோ...நம்ம ஊர்ல பண்ணியிருந்தா Rs 10000/- தான் ஆயிருக்கும்.. என்னத்த சொல்லரது.. இனி எந்த டாக்டரையும் நம்ப கூடாது புரிஞ்சிக்கிட்டேன்.. ஆனா, அதுக்கான செலவு $2000... ம்ம்ம்ம்... அட சும்மா டாக்டர பாத்து ஹாய் சொன்னா, அடுத்த வாரம் $150 பில் வருது...

நான் சொல்ல வரதெல்லாம் ஒன்னு தான்.. வைத்தியம் பாக்கிறத கொஞ்சம் சுலபமா ஆக்குங்க... ஏற்கனவே நொந்து போயிருக்கிற நோயாளியை அதிக மருத்துவ செலவாலயும், கடின மருத்துவ முறையாலும் நோக அடிக்காதீங்கன்றதுதான்... சொல்ல மறந்திட்டேன்.. இவங்ககிட்ட பல நல்ல விஷயங்களும் இருக்கு.. ஆனா இந்த பதிவு புலம்புறதுக்காகனு எழுதுனதுனால ஒன்லி குறைகள்......

இப்படிப்பட்ட சமயத்துல நம்ம ஊரை நினைச்சி பார்த்துகிறது... நாம நினச்சப்ப ஏதோ சொந்தகாரங்க வீட்டுக்கு போற மாதிரி டாக்டர் வீட்டுக்கு போவோம்.. அவரும் ரொம்ப பிகு பண்ணாமா பார்த்து மருந்து ஊசியெல்லாம் கொடுப்பாரு... இங்க இவங்க படுத்தர பாடு இருக்குதே... சொர்க்கமே என்றாலும் அது...............

Tuesday, October 17, 2006

இணையத்தில் தமிழிலக்கியம்

அன்பின் வலைப்பதிவாளர்களுக்கு,

பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கவாய்ப்புண்டு. ஏற்கனவே அறிந்தவர்கள் மன்னிக்கவும், அறியாதவர் உடனடியாக கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

http://www.chennailibrary.com/

திரு.கோ.சந்திரசேகரன் எனும் தமிழார்வலரால் நடத்தப்பட்டு வரும் இந்த வலைப்பக்கத்தில் ஏராளமான தமிழ் மின்னூல்கள் இலவசமாக கிடைக்கிறது.
நீங்கள் நினைத்துக் கூட பார்க்கமுடியாத எண்ணற்ற அரிய தமிழ் நூல்களை இங்கே மின்னூல்களாக அளித்துள்ளார்கள்.

எட்டுத் தொகை நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
திருஞானசம்பந்தரின் படைப்புகள்
திரிகூடராசப்பரின் படைப்புகள்
ஸ்ரீகுமரகுருபரரின் படைப்புகள்
சைவ சித்தாந்த நூல்கள்
நீதி நூல்கள்
இலக்கண நூல்கள்
விவேகானந்தர் நூல்கள்
ஔவையாரின் படைப்புகள்
பாரதியாரின் படைப்புகள்
பாரதிதாசன் படைப்புகள்
கல்கியின் படைப்புகள்
அறிஞர் அண்ணாவின் படைப்புகள்
மு.வரதராசனாரின் படைப்புகள்
ந.பிச்சமூர்த்தியின் படைப்புகள்
புதுமைப்பித்தன் படைப்புகள்

அடேங்கப்பா... இன்று ஆரம்பித்தால் வாழ்நாள் முழுதும் படிக்கும் அளவிற்கு எண்ணற்ற அரிய நூல்கள். தமிழ்க்கடல். இத்தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இவ்வரிய தமிழ்நூல்கள் எளிதில் கிடைக்க வேண்டுமென்றால் இணையத்தை தவிர வேறு நல்லவழி ஏதுமில்லை.

இந்நூல்கள் குறுந்தகட்டில் வேண்டுமென்றால், மிககுறைந்த விலைக்கே அளிக்கிறார்கள். அவர் வலைப்பக்கத்திலேயே படித்தால் முற்றும் இலவசம்.
இத்துணை நூல்கள் மின்வடிவில் இணையத்தில் ஏற்றுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதற்கு பின்னால் இருக்கும் திரு.கோ.சந்திரசேகரன் உழைப்பும் தமிழார்வமும் வியப்பிற்கும் பாரட்டுதலுக்கும் உரியது.

அனைவரும் தயவுசெய்து இவ்வலைப்பக்கத்திற்கு சென்று முடிந்தவரை அனைத்து நூல்களையும் வாசித்து தமிழறிவை மேலும் வளர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் நண்பர்களுக்கும் இந்த வலைப்பக்கத்தினை அறிமுகப்படுத்தவும். நன்றி

Friday, September 29, 2006

தேசமா? மதமா?

கடந்த சில நாட்களாக கஷ்மீரில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.
2001 ஆம் ஆண்டு நமது இந்திய நாட்டு பாராளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு முக்கிய காரணமாக கருதப்ப்டும் முகமது அஃப்சல் என்ற ஜெய்-ஷி-முகமது தீவிரவாத இயக்கத் தொடர்பு கொண்ட ஒரு தீவிரவாதியை இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் முறையாக விசாரித்து மரணதண்டனை அளித்துள்ளது

இதில் என்ன தவறு... இந்தியர் அனைவரும் வரவேற்க வேண்டிய விஷயம்தானே. ஆனால் கஷ்மீரில் நடப்பதை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது...

http://www.hindu.com/thehindu/holnus/001200609291911.htm

ஒரு தீவிரவாதிக்காக இவ்வளவு போராட்டம்.. இவ்வளவு வன்முறை..
ஏனய்யா.. நீதிமன்றங்கள் முறையாக விசாரிக்கவில்லையா? இல்லையே.. அவன் ஒரு முஸ்லீம் என்பதால் தானே.. நான் பல இடங்களில் முஸ்லிம் தீவிரவாதி என முத்திரை குத்தப்படும் போது வருத்தப்பட்டிருக்கிறேன்.. சில தீவிரவாதிகளால் முஸ்லிம் மதத்திற்கே கெட்ட பெயர் என்று யோசித்திருக்கிறேன்...

ஆனால் இன்று நடப்பதை பார்த்தால் என் எண்ணத்தை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் போலுள்ளது.. இங்கு போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் பொதுமக்கள்...இந்தியர்கள்.. நியாயமாக சந்தோஷப் பட வேண்டிய விஷயத்திற்கு கொடி பிடிக்கிறார்கள்...ஏனென்றால் முகமது அஃப்சல் ஒரு முஸ்லீம்... தேசத்திற்கு பிறகுதான் மதம் என்பது உங்களுக்கு புரியவே புரியாதா? முகமது அஃப்சலால் கொல்லப்பட்ட 11 பேரின் குடும்பங்களுக்கு இந்த போராட்டக்காரர்கள் என்ன சமாதானம் சொல்வார்கள்...

இந்த வெட்கம் கெட்ட செயலுக்கு, கஷ்மீரின் இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் ஆதரவு. மேலும் வெட்கங்கெட்டதனமாய் மத்தியில் ஆளும் காங்கிரஸின் பதில். நாங்கள் இவர்களின் கோரிக்கையை ஆதரிக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை என்று. எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்த பட்சம் புனித ரமலான் மாததில் தூக்கிலிடாமல் அடுத்த மாததிற்கு ஒத்தி வைக்க வேண்டுமாம். இந்த தீவிரவாதிக்கும் புனித மாததிற்கும் என்ன சம்பந்தம். 11 பேரை கொல்ல காரணமாயிருந்த ஒருவனை அல்லா ஏற்பாரா? அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான் அவர்களின் கடவுள் ஏற்பாரா?

இந்த செய்திகளை படித்து மிக மன உளைச்சலுக்குள்ளானேன். எந்த மதமாயிருந்தால் என்ன.. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்துதானே ஆகவேண்டும். கஷ்மீரில் முகமது அஃப்சலின் மரண தண்டனையை எதிர்க்கும் முஸ்லீம் மக்களுக்கு, தாம் முதலில் இந்தியர் என்பதை உணரும் நாள் என்று தான் வருமோ?

Friday, July 14, 2006

பகைவனுக்கு அருளுதல் அவசியமா?

இந்தியா 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிலநடுக்க நிவாரண நிதியாக பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. உடனடியாக இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி உதவியது. அது மட்டுமில்லாமல் நிலநடுக்க நிவாரண நிதியாக 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிப்பதாக உறுதியளித்தது. அதன்படி ஜூலை 11ம் தேதி, ஆம் ஜூலை 11ம் தேதி 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு அளித்தது. அதே நாளில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை கொல்ல தீவிரவாதிகளுக்கு உதவி பாகிஸ்தான் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

http://www.adnki.com/index_2Level_English.php?cat=Politics&loid=8.0.320012712&par=0

http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/LSGZ-6RLGYM?OpenDocument

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

அதெல்லாம் சரி, நாம் ஏன் பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்?
பரஸ்பரம் உதவிக்கொள்ளும் அளவுக்கு நட்பு நாடா?
இல்லையே!!! ஏற்கனெவே மூன்று தடவை போர் புரிந்து பல்லாயிரம் ராணுவ வீரர்களை இழந்துள்ளோமே!!!
ஒரு வேளை பாகிஸ்தான் ஏழை நாடாக இருக்குமோ?
இருக்கலாம் என்று எண்ணும் வேளையில் ஒரு செய்தி கண்ணில் பட்டது.

http://www.jpost.com/servlet/Satellite?cid=1150885885707&pagename=JPost%2FJPArticle%2FShowFull

http://www.newsmax.com/archives/articles/2006/6/29/172920.shtml

ஜுன் 30ம் தேதி அமெரிக்க அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது. 18 F-16 ரக புதிய விமானங்களை பாகிஸ்தான் வாங்க போகிறது. இதில் மூன்று விஷயங்கள் மிகத்தெளிவாக புரிகிறது.

1) பாகிஸ்தான் ஒரு ஏழை நாடல்ல. 5 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ராணுவ தளவாடங்களை வாங்கும் ஒரு நாடு ஏழை நாடாக இருக்க வாய்ப்பில்லை. வாங்கும் 18 விமானங்களில், 2 விமானத்தைக் குறைத்தாலும் நிவாரணப்பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யலாம்.

2) சரி, பாகிஸ்தான் ஏன் F-16 ரக விமானம் வாங்குகிறது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கவோ? ரஷ்யாவில் குண்டு போடவோ? அணுகுண்டு தரச் சொல்லி சீனாவை மிரட்டவோ? இல்லையடா, அது உன் மீது போர்தொடுக்க வாங்கப்பட்டவை. உன்னை அழிக்க, உன்னை மண்ணோடு மண்ணாக்க வாங்கப்பட்டவை. இது இந்தியாவில் இருக்கும் கடைசி குடிமனுக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை.

3) இந்திய உதவியால் மிச்சமடைந்த 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் என்ன செய்யும்? நாட்டு முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போகிறதா? ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன் படுத்த போகிறதா? இல்லையே? எல்லையில் இருக்கு தீவிரவாத கும்பல்களுக்கு பண உதவி செய்து இந்தியாவில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ உதவ போகிறது

பிறகு ஏனய்யா பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்? நான் என் நாட்டிற்காக கட்டிய வரிப்பணம், என் சகோதரியை விதவையாக்கியவர்களுக்கு, என் சகோதரனை எல்லையில் கொல்லத்துடிப்பவனுக்கு ஏன் தர வேண்டும்? எவ்வளவு யோசித்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

நம் பிரதமர் உலகம் போற்றும் பொருளாதார மேதை, அறிவுஜீவி, ஏன் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்?
உங்களுக்கு ஒருவேளை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள், புரிந்து கொள்கிறேன்

Tuesday, July 11, 2006

குளோபல் வார்மிங் - நான் என்ன செய்ய முடியும்?

சிறிது நாட்களுக்கு முன் The Day After Tomorrow படம் பார்த்த போது கொஞ்சம் பீதியாகத்தான் இருந்தது. சரி மனித இனத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. என்ன, நாம் நினைப்பதைவிட மிகச் சீக்கிரமாக இம்முடிவு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளது. உலக நாடுகளும், உலக தலைவர்களும், ஐ.நா சபையும் ஒன்று சேர்ந்து யோசித்து இந்த குளோபல் வார்மிங் பிரச்சனையை சமாளிக்க வேண்டும். தனி மனிதனாய் நாம் என்ன செய்ய முடியும் என்று தான் இது நாள் வரை நான் எண்ணிக் கொண்டு இருந்தேன்.

ஆனால் இணையத்தில் இது குறித்து தேடும் போது கிடைத்த தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதிக அளவு கரியமில வாயுவை(CO2 ) காற்று மண்டலத்தில் கலப்பதே இந்த குளோபல் வார்மிங்கிக்கான காரணம் என்பது நாம் அறிந்ததே. மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை கட்டுப்படுத்தினால் காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் கட்டுப்படுத்தலாம். எனவே நீங்கள் மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை சிக்கனப்படுத்தினாலே குளோபல் வார்மிங்கை தடுக்க உம்மால் இயன்றதை செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.


  1. வேலை முடிந்ததும் கணினியை அணைப்பது.
  2. 10 நிமிடத்திற்கு மேல் கணினி செயல்படாமல் இருந்தால், கணினி திரை தானாகவே அணைவது போல் கணினியில் settings செய்தல்.
  3. நடந்து செல்ல முடிந்தால், எரிபொருள் வாகனங்களைத் தவிர்ப்பது
  4. துணி துவைக்கும் இயந்திரத்தில் வெந்நீர் ப்யன்படுத்துவதை தவிர்ப்பது
  5. தேவையற்ற இடங்களில் மின்விளக்குகளை அணைத்தல்.
  6. கதவு மற்றும் சன்னலை திறந்து வைத்து இயற்கை வெளிச்சம் பெறுவது
  7. Incandescent light bulbs பதிலாக Compact fluorescent light bulbs பயன்படுத்துதல்.
  8. நம் வாகனத்தில் சக்கரங்களின் காற்றழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல்.
  9. நம் வாகனத்தை சரியான வேகத்தில் ஓட்டுதல்
  10. நம் வாகனத்திற்கு Emission Test செய்து சரிபார்த்தல்

இது போல் ஒரு தனிமனிதனால் குளோபல் வார்மிங்கை த்டுக்க என்னவெல்லாம் செய்யலாமெனெ சில இணையதளங்களில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள், அதற்கான சுட்டி

http://www.fightglobalwarming.com/page.cfm?tagID=135

http://www.worldwildlife.org/climate/involved/individuals.cfm

இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலகளவில் குளோபல் வார்மிங்கை எதிர் கொள்வதற்கு எடுக்கப்பட்டு வரும் விஷயங்கள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. Greenhouse gases ( விலங்கு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் வாயு ), Green Power (காற்று மின்சாரம், சூரியமின்சாரம்) , எத்தனால் என்று பல மாற்று எரிசக்திகள் குளோபல் வார்மிங்கை கட்டுபடுத்த உபயோகப்படுத்தப்பட போகிறது

இத்தளத்தில் குறிப்பிட்டுள்ள பல குறிப்புகளை நடைமுறைப்படுத்த நம்மால் இயலும். இதை செயல்படுத்துவதின் மூலம் நீங்கள் பணத்தையும் சேமிக்கலாம். உங்கள் கொள்ளுபேரன் விளையாட இவ்வுலகத்தையும் காப்பாற்றி வைக்கலாம். எல்லாம் மிக எளிய விடயங்கள். இதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை செயல்படுத்த அரசாங்கத்தின் தயவு தேவையில்லை, அரசியல்வாதிகளின் பரிந்துரை தேவையில்லை. இதற்குபின்னும் நான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று தோன்றினால் ஒரேஒரு தடவை The Day After Tomorrow படம் பார்க்கவும்.

Monday, July 10, 2006

நிச்சயம் மீண்டும் வெல்வோம்...

இந்தியாவிற்கு கடந்த இரு நாட்கள் கொஞ்சம் சோகமான நாட்கள் தான்.
ISROவின் GSLV ராக்கெட்டும், DRDOவின் அக்னி III ஏவுகணையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்துள்ளன.

http://msnbc.msn.com/id/13801904/#storyContinued

ISRO மற்றும் DRDOவின் விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர். அல்லும் பகலும் பாடுபட்டு உருவாக்கிய ராக்கெட்டும், ஏவுகணையும் தோல்வியடைந்தால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதே விஞ்ஞானிகள் தான் நம்நாட்டிற்கு அக்னி I, அக்னி II ஏவுகணைகளை கொடுத்தார்கள். இதே விஞ்ஞானிகள் தான் சென்ற முறை GSLV ஐ வெற்றிகரமாக ஏவினார்கள்.

நாட்டின் மிகப்பெரிய அறிவுஜீவிகள் நம் விஞ்ஞானிகள், நிச்சயம் இத்தோல்வியிலிருந்து மீண்டு, இத்தோல்வியிலிருந்து நிறைய கற்று, தவறுகளை களைந்து மீண்டும் சாதனை படைத்து இந்தியாவை வல்லரசு நாடாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

Thursday, June 01, 2006

மென்பொருள் நிறுவனங்களின் தொழிலாளர் வைப்புநிதி மோசடி

இப்பொழுதெல்லாம் இந்தியாவிலுள்ள மிகப்பெரும் மென்பொருள் நிறுவனங்கள் தம் தொழிலாளர்களுக்கான வைப்புநிதியை நேரடியாக அரசாங்கத்தில் செலுத்துவதில்லை. இவர்களே தொழிலாளர் வைப்புநிதி ட்ரஸ்ட் என்று ஒன்றை ஆரம்பித்து, அதில் வைப்புநிதியை செலுத்தி வருகிறார்கள். அந்த ட்ரஸ்ட் அந்நிறுவனத்தின் மேற்பார்வையில்தான் இயங்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இதை நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது போலும். எனக்கு அவ்வளவாக அதைப் பற்றித் தெரியவில்லை.

ஆனால் இப்படி வைப்புநிதி அரசாங்கத்திடம் இல்லாமல், ஒரு நிறுவனத்தின் பிடியிலுள்ள ட்ரஸ்டில் உள்ளதால், அந்நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளிக்கு இது நிச்சயம் பாதகமாகத்தான் உள்ளது. அதுவும் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறியவரினால், அவ்வைப்புநிதியை தன்னுடைய புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளவோ, அல்லது பணமாகப் பெற்றிடவோ போராட வேண்டியுள்ளது. இந்த வைப்புநிதி ட்ரஸ்ட், நிறுவனத்தின் அனுமதியின்று ஒரு துரும்பையும் நகர்த்தாது. முடிவில் அந்நிறுவனம் நினைத்தாலன்றி அப்பணத்தைப் பெற இயலாது.

என் நண்பர் ஒருவர் ஒரு இந்திய மென்பொருள் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா வந்தார். மொத்தம் மூன்று ஆண்டுகள் இங்கு அந்நிறுவனத்திற்காக பணி புரிந்தார். பின்னர் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி ஒரு புதிய நிறுவனத்தில் சேர்ந்தார். சேர்ந்த புதிய அமெரிக்க நிறுவனத்தில் வைப்புநிதி வாய்ப்பு இல்லாததால், தன் வைப்புநிதி கணக்கை மூடிவிட்டு அதிலுள்ள பணத்தைக் கோரி தன் பழைய இந்திய நிறுவனத்தை அணுகினார். ஆனால் அந்த இந்திய நிறுவனமோ ஏதோ பல நியாயமற்ற விதிமுறைகளை காட்டி, அவர் இன்னும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டினால் தான் No-Dues கொடுக்க முடியும் என்று கூறிவிட்டது. அந்நிறுவன வைப்புநிதி ட்ரஸ்டோ, நிறுவனத்திடமிருந்து clearance சான்றிதழ் பெற்றுத்தந்தாலொழிய வைப்புநிதியைத் தர இயலாது என்று சொல்லிவிட்டது. எனது நண்பர் சில இலட்சம் ரூபாய்களை இழந்ததுடன் மிகுந்த மன உளச்சலுக்குள்ளானார்.

இந்திய அரசாங்கம், தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்திய இந்த வைப்புநிதி திட்டம் , இதைப் போன்ற நிறுவனங்களால் மிகத்தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தன்னுடைய பணத்தைப்/அடிப்படை உரிமையைப் பெறவே ஒரு தொழிலாளி போராட வேண்டியுள்ளது. இது ஒரு நியாயமற்ற மனிதாபிமானமற்ற செயல். ஒவ்வொரு மென்பொருள்பொறியாளர்கள் மூலம் அந்நிறுவனங்கள் அடையும் இலாபம் ஏராளம். ஒரு சராசரி மென்பொருள்பொறியாளர் ஒருநாளைக்கு சராசரியாக 10-12 மணி நேரம் வேலை செய்கிறான். எடுத்தக் கொண்ட ப்ராஜெக்டை எப்பாடுபட்டாவது சொன்ன தேதியில் முடித்துக் கொடுக்கிறான். தன் நிறுவனத்திற்கு அயல்நாடுகளில் பெருமை சேர்க்கிறான்.

அப்படி நிறுவனத்தில் இருக்கும் வரை அவனுடய உழைப்பின் மூலம் இலாபமடைந்தபின், அவன் நிறுவனத்தை விட்டு விலகினால், அவனை அலைக்கழிப்பதில் என்ன நியாயம்? அவனுக்குரிய பணத்தை தர மறுப்பது என்ன நியாயம்? நம் அரசாங்கம் இந்த சட்டவிரோதப் போக்கை கண்காணிக்க வேண்டும். முடிந்தால் வைப்புநிதியை அரசின் நேரடிப் பார்வையின் கீழ் கொண்டு வரவேண்டும். தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய நிறுவனம் இல்லை மனிதர்களானாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைத்திட வழிசெய்ய வேண்டும்.

Wednesday, May 31, 2006

இலாபம் தரும் பதவி

சட்டப்படி தவறு என்றால் அச்சட்டத்தையே மாற்றுவோம் என்கின்ற அவலம் இப்பொழுதெல்லாம் மிகச் சாதாரணமாக நடக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இலாபம் தரும் பதவியில் இருப்போர் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் போட்டியிடக்கூடாது என்று மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இது தெரிந்தும் இப்படிப்பட்ட பதவியில் இருக்கும் பெருந்தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டதே தவறு. இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்றதோடு மட்டுமில்லாமல் மத்திய அரசில் மிகப் பெரும் பதவிகளில் வேறு இருக்கிறார்கள்.

இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்ற 40க்கும் மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நிச்சயம் பறிக்கப் பட வேண்டியது தான். இவர்கள் நிச்சயம் சட்ட விரோதமாகத்தான் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் இவ்விஷயம் வெளியில் தெரிந்த பின் மத்திய அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இப்பொழுது அவசரமாகச் சட்டம் இயற்றுகிறது. இவர்களுக்கு தேவையான வகையில், பாதகம் நேராத வகையில் இலாபம் தரும் பதவிகளில் இருந்து சில பதவிகளுக்கு விலக்கு அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதாவது சட்ட விரோதமாக பதவியில் இருக்கும் அந்த 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளைக் காப்பற்ற மத்திய அரசு இச்சட்டத்தை இயற்றுகிறது.

நமது மதிப்புக்குரிய குடியரசுத்தலைவர் இச்சட்டத்தை நன்றாக புரிந்து கொண்டு, இச்சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, இச்சட்டத்தில் 'இலாபம் தரும் பதவி' யில் இருந்து நீக்கப்பட்ட சில பதவிகளை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் கொடுமை என்னவென்றால் மத்திய சட்ட அமைச்சகம் இச்சட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் மறுபடியும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பவுள்ளது. ஏனெனில் குடியரசுத்தலைவரின் பரிந்துரைகளை செயல்படுத்தினால், சில தலைவர்களின் பதிவிகளை அவர்களால் காப்பாற்ற இயலாது. மத்திய அரசு இவ்வாறு இரண்டாம் முறை அனுப்பினால், குடியரசுத்தலைவருக்கு அதை மறுக்கும் அதிகாரமில்லை. எனவே அவர் இச்சட்டத்தை அங்கீகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை.

இந்த அரசியல்வாதிகளால் 33% மகளிர் சட்டத்தை இயற்ற இயலாது, தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த எத்தனையோ நல்ல சீர்த்திருத்தங்களை சட்டமியற்றயிலாது. ஆனால் இவர்களுக்கு பாதகமென்றால் உடனே சட்டத்திருத்தம் கொண்டு வந்துவிடுவார்கள். ஆளும் அரசு என்ன நினைத்தாலும் சட்டமியற்றி சாதித்துக் கொள்ள முடியும் என்கிற வகையில் தான் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளதா? ஆம் என்றால் எங்கோ தவறு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

Tuesday, May 30, 2006

மெகா தொடர்களின் மகா அநியாயங்கள்

தமிழோவியத்தில் திருமலை கோளுந்து அவர்கள் எழுதிய மெகா சீரியல்கள் - சீர்குலைவா ? சீரமைப்பா ? கட்டுரைப் படித்தேன். அதைப் படித்தபின் மெகா தொடர்களின் அநியாயங்கள் பற்றி ஒரு நாமும் ஒரு பதிவு போடுவோம் என்று எண்ணி இப்பதிவை எழுதினேன்.

தொலைக்காட்சி என்பது ஒரு பொழுதுபோக்குச் சாதனம். அதில் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் மக்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கி ஒரு சந்தோஷமான மனநிலையை அளிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்கள் சமுதாயத்தில், குறிப்பாக பெண்களிடம் ஒருவித மனவியாதியைத் தான் உருவாக்கி வருகின்றன. எல்லா தொடர்களும் முடிந்தபின் தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்தப் பின் யாராவது சிரித்தபடி சந்தோஷமாக அடுத்த வேலையைப் பார்க்க போகிறார்களா? நிச்சயம் ஒரு ட்விஸ்டுடன் தான் தொடரும் போட்டிருப்பார்கள். நாளை அதைப் பற்றி தெரியும் வரை ஒருவித பரபரப்புடன் தான் அலைகிறது மக்கள் கூட்டம்.

இந்த இரண்டு மனைவி விஷயம் எனக்குத் தெரிந்து எல்லா தொடரிலும் சர்வசாதரணமாக உண்டு. அட இந்த கோலங்கள் அல்லது செல்வி தொடர்களில், ஒரு குடும்பமாவது ஒழுங்காய் இருக்கிறதா? ஒரு தம்பதியினராவது சந்தோஷமாய் இருக்கிறார்களா? எல்லாவற்றிலும் கள்ளத்தனம். இரண்டு மனைவி, விவாகரத்து, கள்ளக்காதல், மோசடி, கொலை etc... மத்த விஷயங்களில் முன்னேறுகிறார்களோ இல்லையோ, கதைகளில் காண்பிக்கப்படும் க்ரைம்களில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. பெண் தியாகம் செய்கிறாள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவேயில்லை. இதையெல்லாம் பார்த்தால் எப்படி ஒரு பாஸிடிவ் தாட்ஸ் வரும்.

ஒரு தொடரில் கதைப்படி(??) ஒரு கதாபாத்திரம் இறந்து விடுகிறார். தத்ரூபமாய் எடுக்கிறேன் என்று சொல்லி மூன்று நான்கு நாட்களுக்கு இறந்தவருக்கு செய்யும் எல்லா சடங்குகளையும் காட்டுகிறார்கள். அந்த வாரம் முழுவதும் ஒரே அழுகை. ஏற்கனவே அலுவலகத்தில் நொந்து போய் வீட்டிற்கு போனால் அங்கேயும் ஒரே அழுகை. அதற்கு சில நாட்களுக்கு பிறகு மற்றுமொரு தொடரில் கணவனை இழந்த பெண் ஒருவருக்கு செய்யும் சடங்குகள். அட ராமா... எங்கள் வீட்டிலேயே ஏதோ துயரம் நடந்தது போல் இருந்தது என் மனைவியின் மனநிலை.

இவர்கள் சொல்லும் கதைப்படி ஹீரோயின் குறைந்தபட்சம் ஒரு மூன்று ஆண்டு காலாமாவது துயரப்படுவார். ஊரில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் அவருக்குத்தான் வரும். பாதி துயரங்கள் வில்லனால் வந்தால் மீதி துயரங்கள் தியாகம் என்ற பெயரில் ஹீரோயின் அடிக்கும் கூத்துகளால் வரும். அந்த மூன்று ஆண்டு காலமும் வில்லன் நன்றாக இருப்பார். கடைசியில் அந்த டிவி நிறுவனம் தொடரை முடிக்கச் சொன்னால், கடைசி ஒரு வாரம் ஹீரோயின் வில்லனை வென்று சாதனை புரிந்து தொடரை முடித்துவிடுவார்கள். நல்லவர் முதலில் இருந்தே ஜெயிப்பதாக காட்டும் ஒரு தொடர் கூட இதுவரை வந்ததாக எனக்கு நினைவில்லை. இதையெல்லாம் பார்த்தால் ஹீரோயினாய் இருந்து மூன்று வருடம் துயரப்படுவதை விட, வில்லனாய் ஒரே ஒரு வாரம் அடி வாங்கிக் கொள்ளத்தான் தோன்றும்.

என் மனைவியின் இந்த மெகாதொடர் பார்க்கும் வழக்கத்தை நிறுத்த ஏதேதோ செய்து பார்த்துவிட்டேன். ஒன்றும் பயனளிக்கவில்லை. ஒருமுறை என்னவள், இதற்கு மேல் ஏதாவது சொன்னாலோ அல்லது செய்தாலோ நீங்க உங்க பொறந்த வீட்டுக்கு போக வேண்டிவரும் என்றார். இந்த மெகாதொடர்களின் இம்சையில் இருப்பதை விட நான் என் பிறந்த வீட்டுக்கே போகிறேன் என்றேன் நான். உங்க ஊர்ல கரண்ட் போயிடுச்சாம் இப்போதான் உங்க அம்மா போன் செய்து, கோலங்களும், செல்வியும் என்ன ஆச்சுன்னு கதை கேட்டாங்கோ என்றார் நக்கலுடன்.

Tuesday, May 23, 2006

ஒரு தமிழ் சினிமா ரசிகனின் ஆதங்கம்...

நான் இந்த அமெரிக்கதேசம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. வந்த புதுதில் என் நண்பர் ஒருவர், பெரும்பான்மையான இந்தியப்படங்கள் எல்லாம் ஆங்கில படங்களின் பிரதியாக இருக்கும் இல்லையென்றால் ஆங்கில படங்களின் சாயலாவது இருக்கும் எனக் குற்றச்சாட்டை வைத்தார். அதிலும் குறிப்பாக நிறைய தமிழ்ப்படங்கள் ஆங்கிலப்படங்களின் பிரதி என்பது அவர் வாதம். நான் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கில படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் எண்ணிக்கையில் மிகமிகக்குறைவு. அதனால் அன்று அவருடைய குற்றச்சாட்டு எனக்கு மிகுந்த அபத்தமாய் பட்டது.

இந்த இரண்டு வருடத்தில் கேபிள் டிவி, நூலகம், நெட்ஃப்ளிக்ஸ் உதவியால் குறைந்தது 250 ஆங்கிலப்படங்களாவது பார்த்து இருப்பேன். அவ்வப்போது திரையரங்கம் கூட செல்வதுண்டு. இப்போது என் நண்பரின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதாகவே கருதுகிறேன்.

அப்படியே முழுப்படத்தை(Man on Fire - ஆணை) பிரதி எடுப்பது ஒரு வகையென்றால், சில காட்சிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வது இன்னொரு வகை. சமீபத்தில் பார்த்த கஜினி படத்தில், ஆங்கிலப்படத்திலிருந்த (Memento) கதாநாயகன் பாத்திரத்தை மட்டும் சுட்டு விட்டார்கள். இவர்களின் சுடும் திறனுக்கு முத்தாய்ப்பாய் 80 நிமிடம் ஒடுகிற ஒரு ஆங்கில படத்தின்(phone booth) முழுக்கதையை 20 நிமிட உச்சகட்ட காட்சியாக சமீபத்தில் வந்த சரத்குமார் படத்தில் பார்த்தேன். ஒரே ஆங்கில படத்தை இரண்டு மூன்று இயக்குநர்கள் ஓரே நேரத்தில் தமிழில் எடுத்த கூத்தெல்லாம் கூட உண்டு. இதில் என்னை மிகவும் பாதித்தது, நல்ல கலைஞன் என்று நாம் கருதும் கமலஹாசனின் சில படங்கள் (தெனாலி, அவ்வைசண்முகி) கூட ஆங்கிலப்படங்களின் பிரதியாக இருந்ததுதான்.

இதனால் எல்லா தமிழ்ப்படங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிறது. இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாலும், இதே போல் ஏதாவது ஆங்கிலப்படம் வந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. இவர்கள் வெறும் ஆங்கிலப்படங்களை மட்டும் பிரதி எடுக்கிறார்களா இல்லை நமக்கு தெரியாத வேற்று மொழிப்படங்களையும் சுடுகிறார்களா என்ற சந்தேகமும் எழாமலில்லை.

இதுவும் ஒருவகையில் திருட்டுதான். திருட்டு விசிடிக்கு ஒருபுறம் போராடிக்கொண்டே இன்னொருபுறம் டிவிடியில் ஆங்கிலப்படங்களைப் பார்த்து காட்சி/கதை திருடுவது எந்த விதத்தில் நியாயம்? அடுத்தவனின் உழைப்பில் விளைந்ததை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனத் தன் பெயரைப் போட்டுக்கொள்வது அசல் ஏமாற்றுவேலை தானே? BIG எனும் ஆங்கிலப்படத்தை சுட்டு 'நியூ' எனும் படத்தை எடுத்தார் நம் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் அந்த திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே 'இது என் கற்பனையில் உருவான கதை' என்று கூசாமல் பொய் சொல்லியிருப்பார். கிரணின் குத்துப் பாட்டு வேண்டுமென்றால் அவரது கற்பனையில் உருவாகியிருக்கக்கூடும்

இதற்கான அவசியம் என்ன? நமக்கு திறமையில்லையா? நம்மில் திறமையானவர் இல்லையா? இல்லை வெள்ளைக்காரன் எங்கே தமிழ் படத்தைப் பார்க்கப்போகிறான் என்ற தைரியமா? வேண்டாமய்யா இந்த வேலை. உங்களை நம்புங்கள், உங்கள் திறமையை நம்புங்கள். உங்களால் நிச்சயம் உலகத்தரத்திற்கு திரைப்படங்களை எடுக்க முடியும். சொந்த உழைப்பில் நல்ல தரமான திரைப்படங்களை எடுத்து தமிழனின் திறமையை உலகத்துக்கு உணர்த்துங்களய்யா.

Monday, May 22, 2006

தமிழ் மணத்தில் ஒரு புதிய பறவை

தமிழ் இணைய பதிவாளர்களுக்கு வணக்கம்.
நான்கு மாதங்களுக்கு முன்வரை அலுவலக வேலை சுளுக்கு எடுக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 12-13 மணி நேரம் அலுவலகத்திலேயே கழியும். அப்போதெல்லாம், மின்னஞ்சல் பார்த்துக் கொள்ளவும், வங்கிக் கணக்கு பார்க்கவும் மட்டுமே இணையத்திற்கு வருவதென்றிருந்தது.

திடீரென எனக்கே தெரியாத ஏதோ ஒரு காரணத்தினால் என்னை வேறு ஒரு ப்ராஜெக்டிற்கு மாற்றி விட்டார்கள். அங்கோ ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை இருந்தால் அதிகம். சஹாரா பாலைவனத்தில் பிறந்து வளர்ந்தவனை சியாச்சின் மலைச் சிகரத்திற்கு அனுப்பியது போலிருந்தது. வெறுமனே காலம் கடத்துவது எவ்வளவு கடினமானது என்பது அப்போது புரிந்தது. நல்ல வேளை அனாதை ரட்சகனாய் வந்து என்னை காப்பாற்றியது இணையம். இப்போதெல்லாம் பாதி நாள் கழிவது இணையத்தில் தான்.

அப்படி ஒரு நாள் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது தடுக்கி விழுந்த இடம் தான் தமிழ்மணம். அதன் பிறகு மொத்தமாக 3 மாதங்கள் தமிழ்மணத்தை விட்டு வெளியேறவேயில்லை. தமிழ்மண அனுபவத்தோடு, என் தமிழார்வமும் சிறிது என்னை உசுப்பிவிட்டதால், ஒரிரண்டு கட்டுரைகளை எழுதி திண்ணைக்கு அனுப்பினேன். திண்ணையில் மட்டும் தானே திட்டி பின்னூட்டம் இட இயலாது, அந்த தைரியத்தில் தான்.

பின்னர் ஒரு நாள் என் நண்பர் ஒருவருடன் தமிழன் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது, அது குறித்து ஒரு பதிவை எழுதி முத்து(தமிழினி) அவர்களை திராவிட தமிழர்கள் வலைப்பூவில் பதிக்க வேண்டினேன். அப்பொழுதுதான், எனக்கு சொந்தமாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கும் விபரீத ஆசை வந்தது. இதோ ஆரம்பித்துவிட்டேன்.

நெற்றிக்கண்-நக்கீரன் :- சொந்தப் பெயரில் வலைப்பூ ஆரம்பிக்க பயந்தது(யார் அடி வாங்குறது) தவிர வேறு பெயர்க்காரணம் ஏதுமில்லை.

உங்கள் அனைவரின் நல்லாசியுடன்
- நக்கீரன்

நான் தமிழனில்லையா????

தமிழகத்தைத் தமிழன் தான் ஆள வேண்டும் - வேறு எந்த அண்டை மாநிலத்திலும் தமிழன் ஒரு நகராட்சித் தலைவராகக் கூட முடியாது. அப்படியிருக்கத் தமிழகத்தை மட்டும் அடுத்தவர் ஆள அனுமதிக்கலாமா?.இது ஒரு சிலரின் வாதம். நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய வாதம். இதைப் பற்றி வாதிடும் போது என் நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் இவர்கள் தமிழர்கள் அல்லர் என்றும், அவர்களுக்குத் தமிழகத்தை ஆள உரிமையில்லை என்றும் வாதிட்டார். 'தமிழன்' என்பவன் யார்? தமிழனை வரையறுக்கவும் என்றேன் நான். அவர் வரையறுப்படி தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் மட்டுமே தமிழன். இதை என் நண்பரின் கூற்றாக மட்டும் கருத ஏனோ எனக்குத் தோன்றவில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பாலான மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்களோ என்று என் மனம் சிறிது துணுக்குற்றது. ஏனென்றால் எனக்கும் தமிழ் தாய்மொழியல்ல.

ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால், தெலுங்கு தாய்மொழியாகப் போனதினால் நான் தமிழனில்லை!
நானும், என் மூதாதையாரும், இதே தமிழகத்தில் பிறந்து வளர்ந்த போதிலும் நான் தமிழனில்லை!
எனக்கு தெலுங்கு, பேச மட்டுமே தெரியும், ஆனால் தமிழில் ஒரு சராசரி தமிழனை விட கொஞ்சம் அதிக புலமையுண்டு, ஆனாலும் நான் தமிழனில்லை!
என் தந்தை தமிழாசிரியராய் நாற்பது வருடங்கள் அரசு பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தப் போதிலும் நான் தமிழனில்லை!
நானும், என் தந்தையும் எங்கள் பெயரிலுள்ள வடமொழி எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதினாலும் நான் தமிழனில்லை!
எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ள பெரும்பாலான நூல்கள் சங்கத்தமிழிலக்கியமாக இருந்தாலும் நான் தமிழனில்லை!
எங்கள் வீட்டு குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்கள் வைத்திருந்தாலும் நான் தமிழனில்லை!
தமிழ் மீது மிகுந்த பற்றும், தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் கொண்டாலும் நான் தமிழனில்லை!

இக்கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள இயலாது. 1953 மற்றும் 1957ல் மொழிவாரியான மாநிலங்கள் உருவாயின. அதற்கு முன்வரை ஒட்டு மொத்த தென்னிந்தியாவிற்கும், சென்னை ஒன்றே மிகப்பெரிய நகரம். இந்தியா-பாக் பிரிவினையின் போது, இந்தியாவிலிருக்க முடிவு செய்த முசுலீம் சகோதரர்களை இந்தியரல்லர் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமானதோ, அது போன்றது மாநிலங்கள் உருவான போது அவரவர் தாய்மொழிக்குரிய மாநிலத்திற்கு இடம் பெயராமல் தமிழகத்திலேயே தங்கியவரை தமிழரல்ல எனச்சொல்வது. உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழக முசுலீம் மக்கள் தமிழரில்லையா? அவர்களுக்குத் தமிழகத்தை ஆள உரிமையில்லையா? திராவிடர் கழகத்தை ஆரம்பித்துத் தமிழர்களின் சுயமரியாதையை நிலைநாட்டப் போராடிய ஈ.வெ.ரா. பெரியாரின் தாய்மொழி தமிழில்லையே? தமிழ் எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வந்த அவரையும் தமிழரல்ல என்று சொல்லப் போகிறார்களா?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு 'தமில், டமில், தங்ளிஷ்' பேசுபவர்கள் தான் தமிழரல்லாதோர். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும், தம் குழந்தைகளைப் பள்ளிகளில் தமிழ் படிக்க ஊக்குவிக்காதப் பெற்றோரே தமிழரல்லாதோர். தமிழ் தெரிந்தும் தமிழில் பேசுவதை மரியாதைக் குறைவு என எண்ணுவோரும், தமிழில் பெயர் வைப்பதைப் பிற்போக்குத்தனம் என கருதுவோருமே தமிழரல்லாதோர். தமிழருக்கும், தமிழகத்திற்கும் பாதகம் நேரும் போது அதை எதிர்த்து நிற்காமல் ஓடி ஒளிபவரே தமிழரல்லாதோர். தமிழ் மொழியின் மீது பற்றற்றவரும், தமிழகத்தின் முன்னேற்றத்தில் முனைப்பற்றவரும், தமிழர் வாழ்வின் ஏற்றத்தில் ஆர்வமில்லாதவருமே தமிழரல்லாதோர்.

என் வரையறைப்படி தமிழையும், தமிழகத்தையும் நேசிக்கும் அனைவரும் தமிழரே! அந்த வகையில், பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் இவர்கள் அனைவரும் தமிழரே. என்ன சொன்னாலும் இவர்கள் தமிழக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்கள் என்பதை மறுக்க இயலாது. எம்.ஜி.ஆர் மீது தமிழர்கள் வைத்திருந்த அன்பிற்கு ஈடு இணையில்லை. 13 ஆண்டுகள் தொடர்ந்து தமிழகத்தை ஆண்டது நிச்சயம் ஒரு சாதனை. விஜயகாந்த் உதவி செய்த அளவிற்குக் கூடத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மற்ற நடிகர்கள் தமிழக மக்களுக்கு உதவியிருப்பார்களா என்பது ஐயமே. வைகோ இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். இருமுறை சட்டமன்ற தேர்தலில் வென்று பத்து ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு உள்ளார் ஜெயலலிதா. பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், இவர்களையெல்லாம் தமிழரல்ல எனக்கூறுவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்.

யார் என்ன சொன்னாலும், நான் தமிழன் என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை, ஒரு சராசரி தமிழனுக்குத் தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் மீதும் எந்த அளவுக்கு உரிமையுள்ளதோ அதே அளவு உரிமை எனக்கும் உண்டு. இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு யாருடைய ஒப்புதலும் எனக்குத் தேவையில்லை. இந்த என் கருத்துக்குத் தமிழ் இணைய வாசகர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன். தமிழன் என்று சொல்கிறேன், தலை நிமிர்ந்து நிற்கிறேன்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
Thursday May 11, 2006

இப்பதிவு வெளியாகும் வேளையில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகளின் தலையெழுத்தைத் தமிழக மக்கள் நிர்ணயத்திருப்பார்கள். தி.மு.க அணியோ அ.இ.அ.தி.மு.க அணியோ, கருணாநிதியோ ஜெயலலிதாவோ, அல்லது கூட்டணி ஆட்சியோ இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்கப் போகிறது.

இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு சரமாரியாக இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்துள்ளன. மக்களும் இவர்களின் இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் நம்பி மிகுந்த எதிர்பார்ப்புடன் இவர்களுக்கு ஒட்டளித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்
http://www.iamformylapore.com/content/emtamil.pdf
அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்
http://www.aiadmkindia.org/manifesto%202006/Election%20Manifesto-%20English%20Tamil%20Nadu.pdf

இதைத் தவிர இந்த இரு கட்சிகளுமே அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லாத பல சலுகைகளைப் போகிறபோக்கில் இறைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு இவர்களின் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் வேறு.

எங்கும் இலவசம் எதிலும் மானியம். தொலைக்காட்சிப்பெட்டி, தங்கத்தாலி, கணினி, எரிவாயு அடுப்பு, மிதிவண்டி என்று இன்னும் பல பொருட்கள் இலவச வரிசையிலுண்டு. திருமணத்திற்கு 15000, கர்ப்பிணிகளுக்கு மாதம் 1000, வேலையில்லாதோற்கு மாதம் 300 என்று பல நிதியுதவிகள். தமிழனை சோம்பேறியாக்கப் போட்டி போடுகின்றன கழகங்கள். எனக்குத் தெரிந்த வகையில் இத்தகைய இலவசத் திட்டங்களால் எந்த நாடோ சமுதாயமோ முன்னேறியதாக நினைவில்லை. மாறாக அது அச்சமுதாயத்தை அழிவுப்பாதைக்கே கொண்டுச் செல்லும். இதையெல்லாம் காணும் பொழுது 'வேட்டி சேலை கேக்காதீங்க, வேலை வெட்டி கேளுங்க வேட்டி சேலை நாமலே வாங்கிக்கலாம்' எனும் தமிழ்த்திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது.

இலவசம் குறித்த வாதங்கள் ஒரு புறம் இருக்க, இந்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்படும் என்பதுதான் இப்போதுள்ள மிகப் பெரிய கேள்வி. இப்பொழுதே பிரதமர் நிழலில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தி.மு.க தலைவர் பிரதமரை துணைக்கழைக்கிறார். எவெரேனும் குறித்துக் கொண்டு, அ.தி.மு.க தலைவருக்குத் தேர்தலுக்குப்பின் நினைவுறுத்தினாலன்றி அவர் அளித்த வாக்குறுதிகள் அவருக்கு நினைவிருப்பது ஐயமே. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தேர்தல் அறிக்கைகள் கட்சிகளின் ஜனநாயக உரிமை அதில் தலையிட முடியாது என மறுத்து விட்டன. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் எந்த வாக்குறுதியை வேண்டுமென்றாலும் அளிக்கலாம். அது நிறைவேற்றப்பட முடியாததாகினும் கவலையில்லை. வாக்குறுதிகளின் நம்பகத்தன்மைக் குறித்தும் கவலையில்லை. வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றவில்லையென்றாலும், யாரும் ஒன்றும் செய்ய இயலாது. இந்த விஷயத்தில் அரசியல் சட்டங்கள் மிகத்தெளிவாக அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாகத் தீட்டப்பட்டுள்ளன. அப்படியென்றால் யார் தான் இதை கண்காணிப்பது?

ஓட்டு போட்டவுடன் நம் வேலை முடியவில்லை மக்களே! வல்லாரை மூலிகை சாப்பிட்டாவது இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைக்க வேண்டும். வெற்றிப் பெற்று வரும் அரசு, அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறைந்த பட்சம் வாக்குறுதிகளை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளையாவது எடுக்க வேண்டும். அப்படி கொடுத்த வாக்குறுதிகளை மறுப்பவருக்கும், மறப்பவருக்கும் அல்லது நிறைவேற்றாமலிருக்க ஏதாவது சாக்கு சொல்வோருக்கும் தண்டனை கொடுக்க நாம் 5 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் மூன்றாண்டுகளில் வரும். வேறு எதற்கும் பயப்படாத அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் பயப்படும் ஓரே ஆயுதம் ஓட்டு. அதிர்ஷ்டவசமாக ஜனநாயகம் அந்த ஆயுதத்தை மக்களிடம் அளித்துள்ளது. அதற்கு பயந்துதான் கோடீஸ்வரனும் குடிசைக்குள் நுழைந்து ஓட்டு கேட்கிறான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும் கட்சிக்கே அடுத்த ஓட்டு என்பதை உணர்த்துவோம். இதனால் இரு பயன்கள். ஒன்று அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும். இரண்டு அடுத்த தேர்தலில் நியாமான வாக்குறுதிகளை அளிக்கும்.

தமிழா! உன் மறதியை மூலதனமாகக் கொண்டு இங்கு அரசியல் வியாபாரம் நடக்கிறது. நீ உறங்கும் வரை உன்னை உறிஞ்சி உயர்வடையும் இந்த அரசியல் கூட்டம்.

விழித்துக் கொள்.

தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்


Thursday April 20, 2006


ஒருவழியாக பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் 7 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. வங்கி ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதியத்திற்காக போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த ஏழு நாட்களும் மக்கள் பட்ட இன்னல்கள் எத்தனை. தோராயமாக 1,00,000 கோடி மதிப்புள்ள ட்ரான்ஸாக்ஷன்கள் நின்று போனதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பெருநகரங்கள் முதல் சிறு கிராமம் வரை இந்த வங்கி கிளைகள் இயங்குவதால், இந்த வேலை நிறுத்தம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை பொதுமக்கள் முதல் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வழியின்றி ஓய்வு பெற்றவர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மாத வருமானம் பெறுபவர்கள், மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் உரிமையை நிலை நாட்ட வேலை நிறுத்தம் செய்யும் போதும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. இதற்கு தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி மத்திய மாநில அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு தொழிற்சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிடும் போது அதை தவிர்க்க தேவையானவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் போனால், அதற்கான மாற்று வழிகளை உத்தேசித்து பொது மக்களுக்கு இன்னல் நேராமல் காக்க வேண்டும். நியாயமான கோரிக்கைகளை உடனடியாக ஏற்கவும், இல்லாத பட்சத்தில் வேலை நிறுத்தத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கவும் அரசு தயங்க கூடாது. பொது மக்களை இன்னலிருந்து காப்பாற்றுவதே ஒரு அரசின் தலையாய கடமையாகும். ஆனால் இப்போதெல்லாம் வேலை நிறுத்தம் ஆரம்பித்து ஓரிரு வாரம் அவதியுற்று பின்னர் பிரச்சனை தீர்க்கப்படுவது வழக்கமாகியுள்ளது.

தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப் போரட்டத்தை, அரசாங்கத்தை மிரட்டும் கருவியாக பயன்படுத்தக் கூடாது. பேருந்து வேலை நிறுத்தத்தின் எப்படி ஒரு வங்கி ஊழியன் பாதிக்கப்படுகிறானோ, அப்படியே வங்கி வேலை நிறுத்ததின் போது பேருந்து ஊழியன் பாதிக்கப்படுகிறான் என்பதை உணர வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் பேருந்து பணியாளர்கள் போனஸ் தொகையை உயர்த்த வேண்டி, சரியாக தீபாவளிக்கு ஒரு சில தினம் முன்பு வேலை நிறுத்தப்போரட்டத்தை ஆரம்பித்தார்கள். அரசாங்கத்தை மிரட்டி பணியவைக்கவே இப்படி தீபாவளிக்கு முன் இப்போரட்டத்தை ஆரம்பித்தார்கள். இப்படி அரசை மிரட்டும் எண்ணத்துடன் அறிவிக்கப்படும் போராட்டங்கள் பொது மக்களின் ஆதரவை இழக்கிறது. தொழிற்சங்கங்கள் தாமும் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கும் போதும், தம் சகோதர, சகோதரிகளை எவ்வளவு கொடுமைகளுக்கு உள்ளாக்கப் போகிறோம் என்பதை உணர வேண்டும்.

வேலை நிறுத்தப் போரட்டங்களுக்கும், அதனால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளுக்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் மட்டுமே காரணமாக இருக்க, எந்த விதத்திலும் சம்பந்த படாத பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது துரதிஷ்டவசமானது. அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் நினைத்தால் நிச்சயம் வேலைநிறுத்தம் இல்லா இந்தியாவை உருவாக்க முடியும்.