Wednesday, November 22, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...4

2003 மத்தியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அமெரிக்காவில் சுமார் 400,000 எம்ப்ரையோஸ்கள்(embryos) உபரியாக உள்ளது இவை அனைத்தும் தனியார் கருத்தரிப்பு நிலையங்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. முதலில் இவ்வளவு எம்ப்ரையோஸ் உபரியானதன் காரணம் என்னவென்று பார்ப்போம்.

இயற்கையாக கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லாத தம்பதியினருக்காக செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க செய்து பின்னர் அதை பெண்ணின் உடலில் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்ள உதவுவதே கருத்தரிப்பு நிலையங்களின் பணி. இதற்காக வரும் தம்பதியினரில், பெண்ணுக்கு சில மருத்துவ முறைகள் செய்து அவரிடம் இருந்து தரமான 24 சினை முட்டைகளை எடுப்பர். பின்னர் ஆணிடமிருந்த பெறப்பட்ட விந்தணுவின் மூலமாக ஆய்வகத்தில் அந்த 24 முட்டைகளையும் கருத்தரிக்கச் செய்வர். மூன்று நாட்களுக்கு பிறகு 24 எம்ப்ரையோஸ் ரெடி. அதிலிருந்து ஒரு 4 எம்ப்ரையோஸ்களை எடுத்து பெண்ணின் கருப்பைக்குச் செலுத்துவர். நான்கு எம்ப்ரையோஸ்களில் ஏதாவது ஒன்று குழந்தையாக அல்லது 2 இரட்டைக் குழந்தையாக மாறும். மிச்சமுள்ள எம்ப்ரையோஸ்களை எதிர்கால தேவைக்காக உடனடியாக திரவ நைட்ரஜனில் மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பாக சேமிப்பர்.

அப்படி முதல்முறை செலுத்தப்பட்ட எம்ப்ரையோஸ்கள் சிலபல காரணங்களால் குழந்தையாக மாறாவிட்டாலோ, அல்லது இரண்டாவது குழந்தை வேண்டுமென்று நினைத்தாலோ, சேமித்து வைக்கப்பட்ட எம்ப்ரையோஸ்களிலிருந்து ஒரு 4 எடுத்து மறுபடியும் பெண்ணின் உடலில் செலுத்துவர். இந்த செய்முறைகளின் போது சில எம்ப்ரையோஸ்கள் அழிந்து போகும் வாய்ப்பும் உண்டு. எப்படி பார்த்தலும் 16 முதல் 20வது எம்ப்ரையோஸ்கள் வரை உபரியாகவிடுகின்றன. இப்படி உபரியாவதை சில கருத்தரிப்பு நிலையங்கள் பத்திரமாக பாதுகாக்காமல் முதலிலேயே அழித்துவிடுகின்றன. சில பெற்றோர் பத்திரமாக கருத்தரிப்பு நிலையங்களின் உதவியுடன் பாதுகாத்து வருகின்றனர்.

இப்படி மிச்சமடைந்த 400,000 எம்ப்ரையோஸ்கள் தான் இப்போது அமெரிக்காவின் தலைவலி.
இவ்வளவு எம்ப்ரையோஸ்களை அழிப்பதா? அல்லது ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அளிப்பதா? இல்லை தத்து கொடுப்பதா? இது தான் மக்கள் முன்னுள்ள கேள்வி.
குழந்தையில்லா மற்ற பெற்றோருக்கு எம்ப்ரையோஸ்களை தத்து கொடுக்கலாமென்றால், அதை பெறுவதிற்கு மக்கள் மனதில் விருப்பமில்லை. தமக்கு சம்பந்தமே இல்லாத குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. தவிர அவர்கள் தன்னுடைய எம்ப்ரையோஸ்களை உருவாக்க வ்ழியிருக்கும்போது ஏன் அடுத்தவருடையதை நாட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எனவே இதை அழிக்காமல் ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்கு அளிக்கலாம் என்று ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.

ஆனால் மனித நோய்களை குணப்படுத்த மனித கொல்லமுடியாது என்பது ஒரு பிரிவினரின் வாதம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வாதமும் அதே. ஆம் எம்ப்ரையோஸ் என்பது எதிர்கால மனிதனே, எனவே அதை ஒரு மனித உயிர் போன்றே கருத வேண்டு என்கின்றனர் ஒரு பிரிவினர். ஒரு சிலரோ இது மனிதனுக்கு முந்தைய பருவம் இதை மனிதனாக கருதக்கூடாது, எனவே இதை ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். இதற்கு மட்டும் அரசாங்கம் உதவியளித்தால், எம்ப்ரையோஸ்களிடமிருந்து பெருமளவில் ஸ்டெம்செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு மிகப்பெரியளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் ஏதோ ஒரு மாநில உயர்நீதிமன்றத்தில் எம்ப்ரையோஸ் மனிதனே என்று தீர்ப்பு கூட வந்ததாக கேள்வி.

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், இது வரை எம்ப்ரையோஸ்களிடமிருந்து ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம்செல்களை வேண்டுமானால் ஆராய்ச்சிக்குட்படுத்தலாம். ஆனால் இனி புதிதாக எம்ப்ரையோஸ்களை அழித்து ஸ்டெம் பிரித்தெடுக்க அனுமதியில்லை என்று சொல்லியுள்ளார். இந்த நிபந்தனையுடன் தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அவர் நிதிஉதவி அளித்துள்ளார். மக்க்ளே இதில் நம் பங்கு, ஆராய்ச்சி குறித்த முடிவுகளை அவ்வப்போது தெரிந்து கொள்வதோடு அரசாங்கத்திம் முடிவுக்கும் பொறுமையாக காத்திருப்பதே. இறைவனைத்தவிர அனைத்திற்கும் பதில் கொடுக்கும் வல்லமை பொருந்தியதாக இருப்பது அறிவியல் மட்டுமே.

Monday, November 20, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...3

ஸ்டெம் செல்கள் குறித்து தேட தேட மிக ஆச்சரியமான பல விஷயங்கள் தெரிய வருகின்றன. ஸ்டெம் செல்கள் அதிக அடர்த்தியுடன் காணப்படும் மற்றொரு பொருள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி இரத்தம். ஆம் குழந்தை பிறந்தவுடன் தேவையில்லையென்று அறுத்து அப்புறப்படுத்தபடும் தொப்புள்கொடியில் இருக்கும் இரத்ததிலிருந்து நிறைய ஸ்டெம்செல்களை பிரித்தெடுக்க இயலும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இவ்வகையான ஸ்டெம் செல்கள், எலும்பு மஜ்ஜை மற்றும் வழக்கமான இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கும் ஸ்டெம் செல்களை விட மிகச் சிறந்தது என்றும், இந்த வகை ஸ்டெம் செல்களை உபயோகிக்கும் போது நோயாளியின் செல்கள் பெரும்பாலும் இதை நிராகரிப்பதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த செல்கள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், நோயாளி உடலில் செலுத்தும் போது, நோய்வாய்ப்பட்ட செல்களால், இதனை அறிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் நோய் இந்த செல்களுக்கு பரவுவதில்லை. அதேபோல் முழுவளர்ச்சியில்லாததால், இச்செல்களால் நோயாளிக்கு வேறு எந்த வகையான வியாதியையும் கொண்டு செல்ல இயலாது. எனவே இவ்வகையான செல்கள் மிகவும் பாதுகாப்பானவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபோன்ற தொப்புள்கொடி இரத்தத்தை பாதுகாக்க பல வங்கிகள் இப்போது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தோன்றியுள்ளன. அந்நிறுவனங்களில் குழந்தை பிற்ப்பதற்கு 30 நாட்கள் முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டிய செய்முறையை அவர்கள் நம்முடைய மருத்துவருக்கு அனுப்பிவைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நம் மருத்துவர் தொப்புள் கொடி இரத்தத்தை பாதுகாப்பான முறையில் சேகரித்து அந்நிறுவனத்திற்கு அனுப்புவார். குழந்தை பிறந்த 36லிருந்து 48 மணி நேரத்திற்குள் முறையாக பாதுகாக்கப்பட்ட இரத்தம் அவ்வங்கிக்குச் சென்றடைய வேண்டும். பிறகு அந்த இரத்தம் நீங்கள் விரும்பும் வரை பாதுகாக்கப் படும். இதற்கான செலவு ஆண்டுதோறும் 125 முதல் 150 அமெரிக்க டாலர். இதுதவிர முதல்முறை பதிவுக்கட்டணம் சுமார் 1000 அமெரிக்க டாலர்.

சரி, இப்படி சேகரித்து வைப்பதின் அவசியம் என்ன? உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் பிரச்சனை வந்தாலும் இந்த இரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் பிரித்தெடுத்து வைத்தியம் செய்யலாம். அதுமட்டுமன்றி உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நோய்களையும் தீர்க்க இந்த செல்கள் பெரும்பாலும் உதவுமாம். ஏன் பல சமயங்களில் பெற்றோர்களின் நோய் தீர்க்கவும் இதை பயன்படுத்தலாம். அனைத்திற்கும் மேலாக, இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டெம் செல்கள் எல்லாவகையான உயிர்க்கொல்லி வியாதிகளுக்கும் நிவாரணம் அளிக்கப் போகிறது என்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல பொதுமக்களும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்காக இப்பொழுதே அவர்களின் ஸ்டெம் செல்களை சேகரித்து பாதுகாக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.

இந்த தொப்புள் கொடி இரத்த ஸ்டெம்செல்களில் எந்த சர்ச்சையும் இல்லை. வீணாக குப்பைக்குப் போவதிலிருந்து இதை சேகரிப்பதால், எந்த எதிக்ஸ் மற்றும் மத நம்பிக்கை பிரச்சனையில்லை. மிகவும் எளிதில் சேகரித்து பாதுகாக்க முடியும். மற்றும் இவ்வகை செல்களின் வெர்சாலிடி ஆச்சரியபடும்படி உள்ளதால் இவ்வகை மருத்துவம் மிகவிரைவில் முன்னேற்றம் காணும் என்பது ஆராய்ச்சியாளர் எதிர்பார்ப்பு.

தொடரும்

Friday, November 17, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...2

அமெரிக்காவில் விலங்குக்கான ஸ்டெம் செல் சிகிச்சையும் ஆரம்பித்து விட்டனர். இப்போதைக்கு குதிரைகளுக்கு மட்டும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் நாய்களுக்கும் இச்சிகிச்சையை ஆரம்பிக்கப் போகிறார்களாம். குதிரைகளில் முக்கியமாக பந்தயக் குதிரைகளுக்கு இச்சிகிச்சை மிகவும் பயனளிப்பதாக கூறுகின்றனர். மூட்டு தேய்தல், எலும்புமுறிவு போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வியப்பளிக்கும் வகையில் மிகச்சீக்கிரமாக குணமாகிறதாம்.

நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும், நோய்வாய்ப்பட்ட குதிரையை அருகிலுள்ள வெட்னரி டாக்டரிடம் கூட்டிச் சென்றால், அவர் குதிரைக்கு மயக்க மருந்து அளித்து, அதன் உடம்பிலிருந்து குறிப்பிட்ட அளவு கொழுப்பை எடுத்து, ஸ்டெம்செல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவார். நாட்டில் மிகச்சில ஆய்வுக்கூடங்களே இப்பணியை மேற்கொண்டுள்ளன. அங்கு குதிரையின் கொழுப்பிலிருந்து ஸ்டெம்செல் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் வெட்னரி டாக்டருக்கு அனுப்ப படுகிறது. அவர் அதை குதிரைக்கு சரியான இடத்தில் ஊசி மூலம் ஏற்றுவார். அவ்வளவு தான். குதிரை கொஞ்சநாட்களில் மீண்டும் பந்தயத்திற்கு ரெடி. இதற்கு சராசரியாக ஆகும் செலவு 2000 அமெரிக்க டாலர்கள்.

இதே போன்ற அடல்ட் ஸ்டெம் செல் முறையை மனிதர்களுக்கும் மருத்துவர்கள் அவ்வப்போது பயன்படுத்துகிறார்கள். இச்சிகிச்சை முறை எல்லா நோயளிகளுக்கும் பயனளிப்பதாக இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதைக்கு, இரத்தம் மற்றும் எலும்பு சம்பந்தபட்ட வியாதிகளை குணப்படுத்த அடல்ட் ஸ்டெம் செல் முறையை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் படித்த செய்தி ஜெர்மனியில் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததாலோ/விபத்திலேயோ(சரியாக நினைவில்லை) அவருடை கபாலம் உடைந்து விட்டது. அடல்ட் ஸ்டெம் செல் முறையால் அவருடய கபாலத்தை மருத்துவர்கள் சரி செய்துள்ளனர். ஆனால் மிகப்பெரும் வியாதிகளான, மாரடைப்பு, கேன்சர், சிறுநீரக கோளாறு மற்றும் நீரிழிவு நோய் போன்ற வியாதிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை முறை கட்டாயம் நிரந்தரமாக தீர்வளிக்கும் என்பதும் அதற்கு அடல்ட் ஸ்டெம் செல்களை விட எம்ப்ரையானிக் செல்களே மிகவும் பொருத்தமானது என்பதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

எம்ப்ரையானிக் செல்களை ஆய்வகத்தில் எளிதாக மிகப் பெருமளவில் தயாரிக்க முடியும் என்பதாலும், மற்ற பல மனித உறுப்புகளின் செல்களுக்கு மாற்றாக இருப்பதும் (அடல்ட் செல்கள் சில மனித உறுப்புகளுக்கே மாற்றாக செயல்பட முடியுமாம்) ஆராய்ச்சியாளர்கள் எம்ப்ரையானிக் செல் ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இது குறித்த பல விவரங்கள் பல இணையதளங்களில் உள்ளது.

தொடரும்

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...1

அமெரிக்க தேர்தல் நடந்த வாரம், ஒரு வேட்பாளர் தனக்கு எதிராக போட்டியிடுபவரைக் குறித்து வானொலியில் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மிகப்பெரும் குறையாகச் சொன்ன ஒன்று, எதிர் வேட்பாளர் ஸ்டெம் செல் ஆராய்ச்சியை எதிர்க்கிறார். மக்களே ஸ்டெம் செல் ஆராய்ச்சியை போய் எதிர்ப்பவரை ஆதரிக்கலாமா.. அது இது என்று குற்றம் சாட்டினார்.. சரி அப்படி என்ன தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நடக்கிறது என்று இணையத்தில் மேய்ந்த போது கிடைத்த விஷயங்கள்.

நாம் எல்லாருமே, ஒரே ஒரு செல்லாக இருந்து பல கோடி செல்களாக பிரிந்து முழுமனிதனாக மாறுகிறோம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் ஏதாவது ஒரு பாகம் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட செல்கள் அழிந்து ஆரோக்கியமான செல்கள் உருவாகி அப்பிரச்சனைய போக்குகின்றன. அப்படி நிகழாத போதுதான் மனிதன் நோயாளியாகிறான். எனவே மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் பாதிக்கப்பட்ட செல்களே காரணம். அப்படியென்றால் வியாதியை குணப்படுத்த பாதிக்கப்பட்ட செல்களை சீர் செய்தாலோ, அல்லது அதற்கு பதிலாக ஆரோக்கியமான் செல்களை உருவாக்கினாலோ என்ன என்ற யோசனையின் விளைவு தான் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் ஸ்டெம் செல் ரிசர்ச்.

ஸ்டெம் செல்லுக்கு தன்னைத்தானே நீண்ட காலத்திற்குப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மையும், வேறு மனித உறுப்புகளின் செல்லாக மாற்றிக்கொள்ளும் தன்மையும் உண்டு. சரி இந்த ஸ்டெம் செல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன. முதலில் விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்கள் மனிதனின் எலும்பு மஜ்ஜையில் மட்டுமே இருக்கிறது என்று எண்ணினார்கள், ஆனால் பல வருட ஆராய்ச்சிக்குப்பிறகு, மனிதனின் பல பாகங்களில், பல தசைகளில் இந்த ஸ்டெம் செல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கடைசியாக மனித உடலில் உள்ள கொழுப்பில் அடர்வு மிக்க ஸ்டெம் செல்கள் உள்ளதாகவும், அதனை சுத்திகரித்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்தால் பல நோய்களை குணப்படுத்தலாம் என்பதை கண்டறிந்துள்ளார்கள். இப்படி மனித உடலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஸ்டெம் செல்களை அடல்ட் ஸ்டெம் செல்கள் என்பர்.

அப்படியென்றால் அடுத்த வகை ஸ்டெம்செல் என்ன?....மிகவும் பிரபலமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும் எம்ப்ரையானிக் (embryonic ) ஸ்டெம் செல். இந்த எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் மனிதக்கருவிலிருந்து கரு உருவான எட்டு நாட்களுக்குள் பிரித்தெடுக்கப்படுகிறது. கண்டிப்பாக மனித உடலில் கருத்தரித்த கருவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதில்லை. வெளியே அதற்கென்று உள்ள கருத்தரிப்பு மையங்களில் கரு உருவாக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவரை அப்படி பிரித்தெடுக்கும்போது அம்மனித கரு அழிந்து போகின்றன. எனவே இவ்வாராய்ச்சிக்கு பலத்த எதிர்ப்பும் மக்களிடம் உள்ளது. விஞ்ஞானிகள் கருவிற்கு பாதகம் இல்லாமல், செல்லை பிரித்தெடுக்க இயலும் என்று முழுமையாக நம்புகிறார்கள். அவர்கள் அதற்கான ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். இத்தகய எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்குத்தான் ஜார்ஜ் புஷ்ஷின் அரசாங்கம் பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ளது.

தொடரும்..

Thursday, November 16, 2006

என்னதான் நடக்குது நம்ம ஊருல...

டிசம்பர் மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வரலாம் என்பது என் திட்டம், அதற்கு இரு மாதம் முன்பாகவே என் மனைவியும் குழந்தையும் சென்னைக்குச் சென்றுவிட்டனர். சென்றவுடன், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று... சரி ஜெட்லேக் மற்றும் காலநிலை மாறுதல்களால், வெகுநாள் கழித்து இந்தியா திரும்பும் குழந்தைகளுக்கு வழக்கமாய் ஏற்படும் உபாதைகளாகத்தான் இருக்கும் என எண்ணினேன்... இப்போது மழை வேறு வெளுத்துக்கட்டுகிறதே.

மனைவியுடன் தொலைபேசும் போது அவர் சொன்ன விஷயங்கள் வருத்தம் கலந்த ஆச்சரியம் அளித்தது. என் மனைவி சென்ற மருத்துவமனை/மருத்துவரைக் காண ஏகப்பட்ட நோயாளிகளாம். மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படும் அள்விற்கு, மக்கள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளார்களாம். ஏதேதோ பெயரில் ஜுரம். பெரும்பாலோனோர் வீட்டில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் வீட்டிலேயே இருவருக்கு சிக்கன்-குனியா... ஒருவருக்கு ஏதோ வைரஸ் ஜுரம். போதாக்குறைக்கு மெட்ராஸ்-ஐ வேறு... குழந்தைகளும், முதியவர்களும் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனராம்...

அவர் சொன்ன விஷயங்களை கேட்டவுடன் இங்கே எனக்கே ஜுரம் வந்தது போலாகிவிட்டது... மக்களே முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் நலனை முன்னெச்சரிக்கையுடன் இருந்து காத்துக் கொள்ளவும்

Thursday, November 09, 2006

அமெரிக்காவில் வைத்தியம்

எல்லாம் நல்லாதான்யா இருக்கு இந்த நாட்டுல... டெக்னாலஜியெல்லாம் நல்லாதான் முன்னேறி இருக்கு... ஆனா என்ன வைத்தியம்/வைத்தியரை பார்க்கிறதுதான் உலகமகா பிரச்சனையா இருக்கு.

ஒரு ஜுரம்னு போன் பண்ண, 102 டிகிரிக்கு மேல் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தா போன் பண்ணு இல்லனா டைலினால், மோர்ட்ரின் சாப்புட்டு தூங்குனு சொல்லாறாங்கோ... அப்பா 3 நாளா ஒரே தலவலி, ஜலதோஷம் படுத்துது.. என்னன்ன கொஞ்சம் பாத்து சொல்லுப்பானா... 2 வாரம் கழிச்சி அப்பாயிண்ட்மெண்ட் தராங்கோ... சரி கஷ்டம் தாங்காம அர்ஜண்ட்கேர் போனா, 4 மணி நேரம் காக்க வைக்கிறாங்கோ. என்னடா இது நமக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் டாக்டர பார்த்துட்டு போறாங்கோ.. நம்மல ஏன் இன்னும் கூப்பிடலன... புரியாம போய் கேட்டா, FIFO கான்சப்ட் அர்ஜெண்ட் கேர்ல கடையாது.. நம்மளையும், நம்ம வியாதியையும் பொறுத்து அவங்களுக்கா எப்ப வைத்தியம் பண்ணலாம்னு தோணுதோ அப்பதான் கூப்பிடுவாங்களாம்...

குழந்தைங்க பாடு இன்னும் கொடுமை... குழந்தைக்கு சளி புடிச்சா இங்க மருந்தே இல்ல.. ஏதோ பார்மசில கவுண்ட்டர்ல விக்கிரத வாங்கி ஊத்த சொல்லறாங்கோ.. நம்ம புள்ளக அத ஒரு ஸ்பூன் குடிச்சிட்டு இன்னும் தான்னு அடம்புடிக்குதுங்கோ..அது ஏதோ ஜூசு மாதிரி இருக்குது... பாட்டில் காலி ஆகுரது தான் மிச்சம்.. சளி அதுவா மனசு வச்சு புள்ளய விட்டு போனாதான் ஆச்சு...

அப்பா புள்ள காலைலிருந்து வாந்தி எடுக்குது.. கொஞ்சம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கோனு போன் பண்ணா, புள்ள தண்ணி குடிக்குதா.. ஒன்னுக்கு போகுதா.. அப்ப சரி.. நாளைக்கு வரைக்கும் வாந்தி நிக்கலனா போன் பண்ணுங்கோ பார்க்கலாம்னு சொல்றாங்கோ... அப்போ நாளை வரைக்கும், புள்ள வாந்தி எடுக்கிறத பார்த்துக்கிட்டா உக்கார முடியும்.

எந்த வியாதிக்கும் அவ்வளவு சீக்கிரம் மருந்தே கொடுக்க மாட்டேங்குறாங்கோ... எல்லாம் தானா சரியாபோகணும்... பாடி ரெசிஸ்டன்ஸ் இருக்கணும்னு எல்லா வியாதியும் முத்தி போன பிறகு தான் பிரிஸ்கிரிப்ஷனையே தொடராங்கோ... ஒரு ஆண்டிபயாடிக் கொடுக்குறதுக்கு ஏதோ Atom பாம் தர மாதிரி யோசிச்சு ப்ரிஸ்கிரைப் பண்றாங்கோ... இது நல்ல விஷயமா கூட இருக்கலாம் ஆனா அதுவரைக்கும் வியாதில அவஸ்தை படபோறது நாம தான்... அதிலும் குழந்தைங்க கஷ்டபடறது தாங்க முடியல....

அடுத்த பிரச்சனை இந்த இன்ஷுரன்ஸ்... எத்தன தடவ படிச்சாலும் புரியவே கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு இந்த கவரேஜ் டீடெய்ல்ஸ் எழுதி வச்சியிருப்பாங்க... ஏதாவது பிரச்சனைனா உடனே டாக்டர் கிட்ட போரத விட்டுட்டு, இது இன்ஷுரன்ஸ்ல கவர் ஆகுமா ஆகாதானு உக்காந்து ரிசர்ச் பண்ணனும்... இப்படித்தான், ஒரு டாக்டர் பேச்ச நம்பி இன்ஷுரன்ஸ்ல கவர் ஆகும்னு நினைச்சி ஒரு சின்ன மைனர் சர்ஜரி பண்ணிகிட்டேன்.. கடைசில இது கவர் ஆகாதுன்னு சொல்லி $2000 தலைல கட்டிட்டாங்கோ...நம்ம ஊர்ல பண்ணியிருந்தா Rs 10000/- தான் ஆயிருக்கும்.. என்னத்த சொல்லரது.. இனி எந்த டாக்டரையும் நம்ப கூடாது புரிஞ்சிக்கிட்டேன்.. ஆனா, அதுக்கான செலவு $2000... ம்ம்ம்ம்... அட சும்மா டாக்டர பாத்து ஹாய் சொன்னா, அடுத்த வாரம் $150 பில் வருது...

நான் சொல்ல வரதெல்லாம் ஒன்னு தான்.. வைத்தியம் பாக்கிறத கொஞ்சம் சுலபமா ஆக்குங்க... ஏற்கனவே நொந்து போயிருக்கிற நோயாளியை அதிக மருத்துவ செலவாலயும், கடின மருத்துவ முறையாலும் நோக அடிக்காதீங்கன்றதுதான்... சொல்ல மறந்திட்டேன்.. இவங்ககிட்ட பல நல்ல விஷயங்களும் இருக்கு.. ஆனா இந்த பதிவு புலம்புறதுக்காகனு எழுதுனதுனால ஒன்லி குறைகள்......

இப்படிப்பட்ட சமயத்துல நம்ம ஊரை நினைச்சி பார்த்துகிறது... நாம நினச்சப்ப ஏதோ சொந்தகாரங்க வீட்டுக்கு போற மாதிரி டாக்டர் வீட்டுக்கு போவோம்.. அவரும் ரொம்ப பிகு பண்ணாமா பார்த்து மருந்து ஊசியெல்லாம் கொடுப்பாரு... இங்க இவங்க படுத்தர பாடு இருக்குதே... சொர்க்கமே என்றாலும் அது...............