Monday, May 18, 2009

தமிழனை அழிப்பவர் யார்?

தமிழன் இத்தனை நாள் சாதியால், மதத்தால், பொருளாதாரத்தால் பிளவு பட்டிருந்தான் என்று கவலை கொண்டோம். அதனால் பல பிரச்சனைகளில் ஒற்றுமையற்று அடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றோ கட்சியால் பிளவுண்டு கிடக்கிறோம். அதற்கு நாமளித்துக் கொண்டிருக்கும் விலை ஈழத்தில் ஒவ்வொரு நொடியும் விழும் பிணங்கள். சாதியால் பிளவுண்ட போது கூட இவ்வளவு பெரிய விலை கொடுக்கவில்லை, மதத்தால் பிளவுண்ட போது கூட இவ்வளவு பெரிய விலை கொடுக்கவில்லை. ஆனால் கட்சியால் பிளவுண்டிருக்கும் போது அளித்துக் கொண்டிருக்கும் விலை கொடியது.

கட்சி பேதங்கள் மறந்து இப்பிரச்சனைக்காக ஒட்டு மொத்த தமிழினமும் கடந்த ஆண்டே போராடியிருந்தால் இப்பேரவலம் தவிர்க்கப் பட்டிருக்கும். கலைஞர் ஏதோ கொஞ்சம் போல போராடிய போது அம்மா ஈழத்தமிழருக்கு எதிராக அறிக்கை விடுத்து கலைஞருக்கு தெம்பூட்டிவிட்டார். இப்பொழுது தேர்தலுக்காக தமிழீழம் என்று முழங்கிய அம்மையார் அன்றே முழங்கியிருந்தால் கலைஞரும் இன்னும் தீவிரமாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார். அல்லது பா ம க ஆவது ஒழுங்காக கலைஞருக்கு ஆதரவளித்திருந்தால், அவருக்கு காங்கிரசின் தயவு தேவைப்பட்டிருக்காது.

ஒட்டு மொத்த தமிழககட்சிகளும் காங்கிரசை தீண்டதகாத கட்சியாக்கிருந்தால் சோனியா இன்று சீக்கியரிடம் பம்முவது போல தமிழரின் காலில் விழுந்திருப்பார். அல்லது தமிழக மக்களாவது எட்டு எம்பிக்களை காங்கிரசுக்கு அளிக்காமலிருந்திருந்தால் தமிழன் மானமிக்கவன் என்று பயந்திருப்பார். ஈழத்தில் நாம் விளையாடினால் அடுத்த தேர்தலில் நமக்கு தமிழகத்தில் ஒரு வாக்கு கூட விழாது என்று உணர்த்தியிரு்ந்தால் சோனியா பயந்திருப்பார். சீக்கியரிடம், கன்னட மக்களிடம் இருக்கும் ஒற்றுமை நமக்கு இருந்திருந்தால் சோனியா இலங்கைக்கு உதவி செய்ய யோசித்திருப்பார். சம்பந்தமே இல்லாத இங்கிலாந்தும் அமெரிக்காவும் கடைசி நேரத்திலாவது கூக்குரலிட இந்தியாவில் ஆட்சிபிடித்த மமதையில் சோனியா. தமிழனுக்கு சுரணையிருந்தால் அன்னையென்று ஒரு கருணையற்ற பெண்மணியின் காலடியில் வீழ்வானா? தமிழகத்தில் நுழைய அனுமதிப்பானா?


இனி எல்லா அரசியல்வாதிக்களுக்கும் இனி தைரியம் தான். ஈழத்தமிழனை விடு, இந்திய தமிழனை அடித்துக் கொன்றாலும் கட்சி பேதங்களால் ஒற்றிமையின்றி கிடக்கும் அந்த இனத்திலிருந்து எந்த நாயும் ஏனென்றுக் கேட்கப் போவதில்லை. ஏற்கனவே சிறிலங்கா கடற்படையால் சுட்டுக் கொல்லபட்டுக் கொண்டிருக்கும் தமிழக மீனவருக்காக கேள்வி கேட்க ஆளில்லை. முல்லை பெரியாரில் குரல் கொடுக்க ஆளில்லை. காவிரியில் தண்ணீர் விட ஆதரவில்லை. பாலாற்றைக் காப்பாற்ற ஆளில்லை. சேது சமுத்திர திட்டத்தைக் காப்பாற்ற ஆளில்லை.

எல்லாவற்றிலும் நாம் தோற்பதற்கு காரணம் ராஜபக்சேவோ, பொன்சகாவோ, சோனியாவோ, எடியூரப்பாவோ, ராஜசேகர் ரெட்டியோ, அச்சுனாந்தனோ அல்ல. எல்லாவற்றிலும் நாம் தோற்பதற்கு காரணம் கலைஞரும், ஜெயலலிதாவும், ராமதாசும் மற்ற தமிழக அரசியல்வாதிகளும், அவர்களின் கட்சியில் இருக்கிறோம் அல்லது அவர்களை பிடிக்கும் என்பதற்காக சுயமாக யோசித்து எது நல்லது எது கெட்டது என்று பி்ரித்துணராமல் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரிக்கும் நாம் தான். சாதி மத பேதங்களை எதிர்த்து போராடவேண்டியதை விட கட்சி பேதங்களை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் இன்று நாம் உள்ளோம்.
நம் தோல்வியை எதிரி தீர்மானிக்கவில்லை, நாம் தான் தீர்மானிக்கிறோம்.

Monday, February 02, 2009

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று(29.1.09) காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்.

உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.

தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.

சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.

உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.

என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள்.

பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான்.
இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது.
ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் அதுதான், இந்திய உளவுத்துறை ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள்.
மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.

இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை.

சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலிஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.

உதாரணம் ரணில், கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?

சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்...

எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை99

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

Saturday, August 23, 2008

Nothing to Say...


Avarai kaapaatha yaarume thevai illa. Avarai avare kaapathikkuvar....

Thursday, March 06, 2008

ஆஸ்திரேலியா பசங்க ரொம்பவே யோசிக்கிறாங்க

ஆஸ்திரேலியா பசங்க ரொம்பவே யோசிக்கிறாங்க...கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

A class act? Opinions differ

எனக்கு எந்த முத்திரையும் குத்திடாதீங்க.... எதையோ படிக்கும் போது இந்த கட்டுரையை பார்த்தேன்.. சரி மக்களோட பகிர்ந்துக்கலாம்னு போடுறேன்... இதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் அந்த கட்டுரை ஆசிரியரின் சொந்த கருத்துக்களே... எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Friday, November 30, 2007

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல்...

BCCIன் எதிரி? ICLன் அணிகளின் விளம்பரங்களை பார்த்துவிட்டீர்களா...

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல்...





டெல்லி ஜெட்ஸ் காமெடி







ஹைதராபாத் ஹீரோஸ்





மும்பை சாம்ப்ஸ்






கொல்கத்தா டைகர்ஸ்





சண்டிகர் லயன்ஸ்



என்ன வேணுமினா சொல்லுங்க ஆனா நம்ம சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் விளம்பரம் சூசூப்ப்பபர்ர்ர்ர்ர்ர்

Tuesday, October 23, 2007

தற்காலிக அகதி...

அமெரிக்கா கலிஃபோர்னியா மகாணம் சாண்டியோகோ நகரில் ஞாயிறு இரவு முதல் காட்டுத்தீ பரவி வருகிறது. இரண்டுநாட்களாக எரிந்தும் இன்னும் தீ அணைந்தபாடில்லை. அமெரிக்கா வரலாற்றிலேயே இது ஒரு மிகப்பெரிய தீ விபத்து என்று சொல்கின்றனர்.

http://www.latimes.com/sports/football/nfl/la-me-sdfire23oct23,1,5108638.story?coll=la-headlines-sports-nfl


சுமார் 1250 வீடுகளுக்கு மேல் எரிந்து சாம்பலாயின. சுமார் 240 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தீ பரவியுள்ளது. நேற்று ஒரே நேரத்தில் மொத்தமாக எட்டு இடங்களில் தீ பரவியது. அதிர்ஷ்ட வசமாக நகரின் நேர்த்தியான செயல்பாடுகளால் ஒரே ஒருவர் தான் உயிரிழந்திருக்கிறார். அது கூட அவர் வெளியேற மறுத்ததால் தான் என்கின்றன தகவல்கள்.


நேற்று வரை நாங்கள் வசிக்கும் பகுதி, விருப்பப் பட்டால் வெளியேறலாம் என்ற வரையறையில் இருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் கட்டாய வெளியேற்றம் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். தேவையான் முக்கிய பொருட்களை மூட்டை கட்டி காரில் அடைத்து வைத்து அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். சிலர் அறிவிப்புக்காக காத்திராமல் தாமாகவே வெளியேறினர்.


நல்ல வேளையாக இன்று எங்கள் பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. எனவே வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. வீடிழந்த பலரின் நிலைமை மிக பரிதாபம். ஒவ்வொரு வீடும் சுமார் 500 ஆயிரத்திலிருந்து 800 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பு இருக்கும். இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்றாலும் எவ்வளவு கிடைக்கும். வீட்டிலிருந்த பொருட்களுக்கு பணம் கிடைக்குமா தெரியவில்லை. அதுவரை அவர்கள் எங்கு தங்குவார்களோ தெரியவில்லை.


நாங்கள் தங்கியிருப்பது வாடகை வீட்டில். அதுவும் அயல்நாட்டில். வெளியேறச்சொன்னதோ தற்காலிகமாகத்தான். அதற்கே மனம் பட்டபாடு இருக்கிறதே... திரும்பி வரும்போது அந்த வாடகை வீடு இருக்குமா? ஆசையாய் வாங்கி வைத்த பொருட்கள் இருக்குமா? அப்போது ஒருகணம் ஈழத்தமிழரை நினைத்து பார்த்தேன். எப்போது திரும்புவோம் என்றே அறியாமல் பிறந்த நாட்டை விட்டு, சொந்தங்களை விட்டு, இருக்கு சொத்துக்களை விட்டு மற்ற நாடுகளுக்கு புலம் பெயரும் போது அவர்களின் மனது என்ன பாடுபடும்.

எப்போதும் டி.இராஜேந்திரை காமெடியனாகவே பார்த்து பழகிய எனக்கு இந்த வீடியோவில் மட்டும் ஹீரோவாக தெரிந்தார்

Friday, October 12, 2007

அட்வைஸ் ப்ளீஸ்

நான் இருக்கும் ஊரில் நிறைய தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதில் பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு, சில நாட்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு. அனைவருக்கும் தமிழின்பால் ஆர்வமுண்டு. இதை எப்படியென்னால் உறுதியாக சொல்லமுடிகிறதென்றால், தங்கள் பிள்ளைகளை பல்வேறு வேலைகளுக்கிடையிலும் தமிழ் படிக்க அனுப்புகிறார்கள். பிள்ளைகளும் மிக ஆர்வமாக தமிழ் பயிலுகிறார்கள்.


இதில் பாதிபேர் அமெரிக்க குடியுரிமையோ அல்லது பச்சை அட்டையோ வைத்திருப்பவர்கள். திரும்பி தமிழகம் வரும் சாத்தியக்கூறு மிகக்குறைவு. அப்படி இருந்தும் தமிழ் படிக்க தவறாமல் வாரயிறுதி தமிழ் வகுப்புக்கு இவர்கள் வருவதற்கு காரணம் தமிழ்ப்பற்றன்றி வேறு என்ன இருக்க முடியும்.


இப்போது பிரச்சனை என்னவென்றால், சிறு பிள்ளைகளுக்கு தமிழ் கற்று கொடுக்கும் வேளையில், பெரியவர்களுக்கு தமிழ்மணம் தமிழ் பதிவுலகத்தை அறிமுகப்படித்தலாமே என்ற எண்ணம் என்னுள் கிடந்து அரிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் ஓரிரு வருடங்கள் பதிவுலகில் பதிவுகள் படித்த அனுபவமுள்ள எனக்கே ஒரு சில விஷயங்களில் கருத்து சொல்ல பயமாயிருக்கும் வேளையில் அவர்களுக்கு தமிழ்மணத்தைப் பற்றி சொல்ல, அவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சை பதிவோ அல்லது பின்னூட்டமோ போட, நம்ம ஆட்கள் பாய்ந்து விடுவார்களோ என்றொரு பயம்.


இதிலென்னொரு விஷ்யம் என்ன்வென்றால், நான் சொல்லும் மக்களில் ஓரளவிற்கு பிராமண நண்பர்கள் வேறு உண்டு. தமிழ்மணத்தில் வேறு பாதி பதிவுகள் பிராமண எதிர்ப்பு பதிவுகளாக உள்ளன. மேலும் **ணி பதிவுகள் வேறு தமிழ்மணம் எங்கும் நிறைந்துள்ளன. அதனால் இவர்களிடம் போய் தமிழ்மணத்தை அறிமுக படுத்தி ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்று பயமாயிருக்கிறது.. என்ன செய்யலாம் சொல்லுங்க...

Tuesday, September 11, 2007

T20 நல்லதா கெட்டதா???

ஏற்கனவே பலர் அடிச்சு, துவச்சி, அலசி, காயப்போட்ட தலைப்புதான். ஆனா மறுபடியும் இன்னைக்கு T20 உலகக்கோப்பை முதல் ஆட்ட ஸ்கோர்கார்டு பார்த்தவுடனே மறுபடியும் பேசுவோம்னு தோன்றியதால் இந்த பதிவு.
இன்றைக்கு முடிந்த முதல் T20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டம் நம்ம மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் நடந்து முடிஞ்சுது. ஸ்கோர்கார்டு பார்க்க இங்கே சொடுக்கவும்.

எனக்கு எப்பவுமே பெளலிங் தான் பிடிக்கும் (பேட்டிங் வராது அது வேற விஷயம்) அதுவும் வெளிநாடுகளில் இருக்கும் பவுண்ஸிங் மற்றும் ஸ்விங் கண்டிஷண்ஸ்ல பவுலர்கள் திறமையா பந்து வீசும் போது நடக்கிற ஆட்டமே இன்டிரஸ்டிங்தான். பேட்ஸ்மேனோடு முழுதிறமையே அப்போ தான் வெளிப்படும். பேட்ஸ்மென் கிட்டதட்ட கிரீஸ்ல பரதநாட்டியம் ஆடுவார் பாருங்க..கண்கொள்ளா காட்சி. அப்போ செஞ்சூரி அடிச்சா அவன் பேட்ஸ்மேன். எனக்கு பேட்டிங் பிச்சுல 300+ ரன் மேட்சை விட பெளலிங் பிச்சுல 230-250 ரன் மேட்ச் ரொம்ப பிடிக்கும்.

ஏற்கனவே எல்லா ஊருலியும் பிட்ச்செயெல்லாம் பேட்டிங் பிச்சாக்கி பெளலர பாதி சாவடிச்சிட்டாங்கோ... ஓடி வந்து உயிரக் கொடுத்து பெளலிங் போட்டா சொத்துனு விழுந்து அடி ராசானு பேட் முன்னால போய் பால் நிக்குது. இப்போ எல்லா டீமும் 300 அடிக்கிறது சாதாரணமா போச்சு. ஓவர் ஸ்டெப் நோ பால், பெளன்ஸர் நோ பால், வைட் பால், எக்ஸ்ட்ரா ரன், பவர்பிளே ன்னு என்ன என்னவோ கொண்டு வந்து பெளலர நல்லா அமுக்கியாச்சு. இப்போ T20 பெளலருக்கு சாவு மணி அடிக்க வந்திருக்குது.

அந்த ஸ்கோர்கார்டை கொஞ்சம் பாருங்க. என் கண்ணுல இரத்தமே வந்துடுச்சு.
West Indies innings - 205(6 wickets; 20 overs) (10.25 runs per over)
Gayle Run-117 Ball-57 4s-7 6s-10 SR-205.26

நம்ம சூப்பர் பவுலர் பொல்லாக் பாருங்க
SM Pollock O-4 M-0 R-52 w-1 R/R-13.00

இதெல்லாம் அந்த மாரியாத்தாளுக்கே அடுக்குமா. பொல்லாக் மனசு என்ன பாடுபட்டு இருக்கும். எல்லா பாலும் பவுண்டரிக்கு அடிக்க இது என்ன பேஸ் பாலா... கிட்டதட்ட பேஸ்பால் மாதிரி ஆயிட்டு வருது கிரிக்கெட். T20 கூட வரட்டும் விளையாடலாம் ஆனா ரூல்ஸ் பேலன்ஸ்டா இருக்கனுமில்ல. பேட்ஸ்மென் அண்ட் பவுலர்ஸ் இரண்டு பேருக்கும் வாய்ப்பு இருக்கிற மாதிரி இருக்கனுமில்ல. ஒருத்தன அவுட் பண்ணாலும் அடுத்தவன் வந்து மறுபடியும் காட்டுத்தனமா சுத்ததான் போறான். 20 ஓவர்ல எப்படிய்யா 10 விக்கெட் எடுக்க முடியும். அதுவும் ஒரு பவுலருக்கு 4 ஓவர் தான்.

சரி தென்னாப்ரிக்கா அவுட்டுனு பார்த்தா, அவனுங்க வெஸ்டிண்டீஸ்க்கும் மேல காட்டானா இருக்கானுங்க...
South Africa innings - 208 - (2 wickets; 17.4 overs) - (11.77 runs per over)
பவுலருங்கல நினச்சாலே அளுக்காச்சியா வருதய்யா....

இந்த சக்-தே-இந்தியா படத்துல ஒரு சீன்.. கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற மரியாதை ஹாக்கிக்கு கிடைக்கிறதில்லனு. கிரிக்கெட்டுலியே பேட்ஸ்மென்னுக்கு கிடைக்கிற மரியாதை பவுலருக்கு கிடைக்கிறதில்ல.. ஏன் டீம் கேப்டன் பதவிக்கு கூட பேட்ஸ்மென் தான் ப்ர்ஸ்ட் சாய்ஸ். கிரிக்கெட் விளையாட்டில் பவுலருக்குரிய மரியாதையை இந்த ICC கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டு வருது. இதெல்லாம் கிரிக்கெட்டுக்கு நல்லதில்ல அம்புட்டுதான்.. சொல்லிட்டேன்.

Saturday, September 08, 2007

Hoover Dam

சென்ற நீண்ட வாரயிறுதிக்கு Grand Canyon சென்று திரும்பும் வழியில் Hoover Dam பார்த்துவிட்டு வந்தோம். சில புகைப்படங்கள் கீழே... பெரியதாய் பார்க்க படங்களை சொடுக்கவும்





























Grand Canyon National Park

சென்ற நீண்ட வாரயிறுதிக்கு Grand Canyon சென்றிருந்தோம். இயற்கையின் மற்றொமொரு வரப்பிரசாதம். சில புகைப்படங்கள் இங்கே...பெரியதாய் பார்க்க படங்களின் மேல் சொடுக்கவும்.









































Wednesday, September 05, 2007

மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?

இந்த வார தமிழ்மண நட்சத்திரம் திரு வரவனையான் அவர்களின் தமிழ் பெயர் சூடு(ட்)வோம் என்ற பதிவினை படித்த போது என்னுள் எழுந்த கேள்வி


மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?


இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி. நான் என் மகளுக்கு பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே(வீட்டுலதான்) தூய தமிழ்பெயர் வைத்துள்ளேன். அதனால் இங்கு அமெரிக்காவில் நான் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. அமெரிக்கரும் சரி தமிழரல்லாத இந்தியரும் சரி, மருத்துவமனையிலும் சரி, மகளின் பள்ளியிலும் சரி மகளின் பெயர் படாதபாடு படுகிறது. எனினும் அது ஒரு சுகமானசுமை. ஒரு பெருமிதம், ஒரு கர்வம். அதை அனுபவித்து பார்த்தால்தான் புரியும்.


ஆனால், இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஏன் இசுலாமியரும், கிருத்துவரும் ஏன் தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே. என்க்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே. ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?. ஏதேனும் காரணமிருக்கிறதா?தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லவும்.