Thursday, March 06, 2008

ஆஸ்திரேலியா பசங்க ரொம்பவே யோசிக்கிறாங்க

ஆஸ்திரேலியா பசங்க ரொம்பவே யோசிக்கிறாங்க...கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

A class act? Opinions differ

எனக்கு எந்த முத்திரையும் குத்திடாதீங்க.... எதையோ படிக்கும் போது இந்த கட்டுரையை பார்த்தேன்.. சரி மக்களோட பகிர்ந்துக்கலாம்னு போடுறேன்... இதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் அந்த கட்டுரை ஆசிரியரின் சொந்த கருத்துக்களே... எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Friday, November 30, 2007

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல்...

BCCIன் எதிரி? ICLன் அணிகளின் விளம்பரங்களை பார்த்துவிட்டீர்களா...

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல்...





டெல்லி ஜெட்ஸ் காமெடி







ஹைதராபாத் ஹீரோஸ்





மும்பை சாம்ப்ஸ்






கொல்கத்தா டைகர்ஸ்





சண்டிகர் லயன்ஸ்



என்ன வேணுமினா சொல்லுங்க ஆனா நம்ம சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் விளம்பரம் சூசூப்ப்பபர்ர்ர்ர்ர்ர்

Tuesday, October 23, 2007

தற்காலிக அகதி...

அமெரிக்கா கலிஃபோர்னியா மகாணம் சாண்டியோகோ நகரில் ஞாயிறு இரவு முதல் காட்டுத்தீ பரவி வருகிறது. இரண்டுநாட்களாக எரிந்தும் இன்னும் தீ அணைந்தபாடில்லை. அமெரிக்கா வரலாற்றிலேயே இது ஒரு மிகப்பெரிய தீ விபத்து என்று சொல்கின்றனர்.

http://www.latimes.com/sports/football/nfl/la-me-sdfire23oct23,1,5108638.story?coll=la-headlines-sports-nfl


சுமார் 1250 வீடுகளுக்கு மேல் எரிந்து சாம்பலாயின. சுமார் 240 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தீ பரவியுள்ளது. நேற்று ஒரே நேரத்தில் மொத்தமாக எட்டு இடங்களில் தீ பரவியது. அதிர்ஷ்ட வசமாக நகரின் நேர்த்தியான செயல்பாடுகளால் ஒரே ஒருவர் தான் உயிரிழந்திருக்கிறார். அது கூட அவர் வெளியேற மறுத்ததால் தான் என்கின்றன தகவல்கள்.


நேற்று வரை நாங்கள் வசிக்கும் பகுதி, விருப்பப் பட்டால் வெளியேறலாம் என்ற வரையறையில் இருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் கட்டாய வெளியேற்றம் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். தேவையான் முக்கிய பொருட்களை மூட்டை கட்டி காரில் அடைத்து வைத்து அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். சிலர் அறிவிப்புக்காக காத்திராமல் தாமாகவே வெளியேறினர்.


நல்ல வேளையாக இன்று எங்கள் பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. எனவே வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. வீடிழந்த பலரின் நிலைமை மிக பரிதாபம். ஒவ்வொரு வீடும் சுமார் 500 ஆயிரத்திலிருந்து 800 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பு இருக்கும். இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்றாலும் எவ்வளவு கிடைக்கும். வீட்டிலிருந்த பொருட்களுக்கு பணம் கிடைக்குமா தெரியவில்லை. அதுவரை அவர்கள் எங்கு தங்குவார்களோ தெரியவில்லை.


நாங்கள் தங்கியிருப்பது வாடகை வீட்டில். அதுவும் அயல்நாட்டில். வெளியேறச்சொன்னதோ தற்காலிகமாகத்தான். அதற்கே மனம் பட்டபாடு இருக்கிறதே... திரும்பி வரும்போது அந்த வாடகை வீடு இருக்குமா? ஆசையாய் வாங்கி வைத்த பொருட்கள் இருக்குமா? அப்போது ஒருகணம் ஈழத்தமிழரை நினைத்து பார்த்தேன். எப்போது திரும்புவோம் என்றே அறியாமல் பிறந்த நாட்டை விட்டு, சொந்தங்களை விட்டு, இருக்கு சொத்துக்களை விட்டு மற்ற நாடுகளுக்கு புலம் பெயரும் போது அவர்களின் மனது என்ன பாடுபடும்.

எப்போதும் டி.இராஜேந்திரை காமெடியனாகவே பார்த்து பழகிய எனக்கு இந்த வீடியோவில் மட்டும் ஹீரோவாக தெரிந்தார்

Friday, October 12, 2007

அட்வைஸ் ப்ளீஸ்

நான் இருக்கும் ஊரில் நிறைய தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதில் பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு, சில நாட்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு. அனைவருக்கும் தமிழின்பால் ஆர்வமுண்டு. இதை எப்படியென்னால் உறுதியாக சொல்லமுடிகிறதென்றால், தங்கள் பிள்ளைகளை பல்வேறு வேலைகளுக்கிடையிலும் தமிழ் படிக்க அனுப்புகிறார்கள். பிள்ளைகளும் மிக ஆர்வமாக தமிழ் பயிலுகிறார்கள்.


இதில் பாதிபேர் அமெரிக்க குடியுரிமையோ அல்லது பச்சை அட்டையோ வைத்திருப்பவர்கள். திரும்பி தமிழகம் வரும் சாத்தியக்கூறு மிகக்குறைவு. அப்படி இருந்தும் தமிழ் படிக்க தவறாமல் வாரயிறுதி தமிழ் வகுப்புக்கு இவர்கள் வருவதற்கு காரணம் தமிழ்ப்பற்றன்றி வேறு என்ன இருக்க முடியும்.


இப்போது பிரச்சனை என்னவென்றால், சிறு பிள்ளைகளுக்கு தமிழ் கற்று கொடுக்கும் வேளையில், பெரியவர்களுக்கு தமிழ்மணம் தமிழ் பதிவுலகத்தை அறிமுகப்படித்தலாமே என்ற எண்ணம் என்னுள் கிடந்து அரிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் ஓரிரு வருடங்கள் பதிவுலகில் பதிவுகள் படித்த அனுபவமுள்ள எனக்கே ஒரு சில விஷயங்களில் கருத்து சொல்ல பயமாயிருக்கும் வேளையில் அவர்களுக்கு தமிழ்மணத்தைப் பற்றி சொல்ல, அவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சை பதிவோ அல்லது பின்னூட்டமோ போட, நம்ம ஆட்கள் பாய்ந்து விடுவார்களோ என்றொரு பயம்.


இதிலென்னொரு விஷ்யம் என்ன்வென்றால், நான் சொல்லும் மக்களில் ஓரளவிற்கு பிராமண நண்பர்கள் வேறு உண்டு. தமிழ்மணத்தில் வேறு பாதி பதிவுகள் பிராமண எதிர்ப்பு பதிவுகளாக உள்ளன. மேலும் **ணி பதிவுகள் வேறு தமிழ்மணம் எங்கும் நிறைந்துள்ளன. அதனால் இவர்களிடம் போய் தமிழ்மணத்தை அறிமுக படுத்தி ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்று பயமாயிருக்கிறது.. என்ன செய்யலாம் சொல்லுங்க...

Tuesday, September 11, 2007

T20 நல்லதா கெட்டதா???

ஏற்கனவே பலர் அடிச்சு, துவச்சி, அலசி, காயப்போட்ட தலைப்புதான். ஆனா மறுபடியும் இன்னைக்கு T20 உலகக்கோப்பை முதல் ஆட்ட ஸ்கோர்கார்டு பார்த்தவுடனே மறுபடியும் பேசுவோம்னு தோன்றியதால் இந்த பதிவு.
இன்றைக்கு முடிந்த முதல் T20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டம் நம்ம மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் நடந்து முடிஞ்சுது. ஸ்கோர்கார்டு பார்க்க இங்கே சொடுக்கவும்.

எனக்கு எப்பவுமே பெளலிங் தான் பிடிக்கும் (பேட்டிங் வராது அது வேற விஷயம்) அதுவும் வெளிநாடுகளில் இருக்கும் பவுண்ஸிங் மற்றும் ஸ்விங் கண்டிஷண்ஸ்ல பவுலர்கள் திறமையா பந்து வீசும் போது நடக்கிற ஆட்டமே இன்டிரஸ்டிங்தான். பேட்ஸ்மேனோடு முழுதிறமையே அப்போ தான் வெளிப்படும். பேட்ஸ்மென் கிட்டதட்ட கிரீஸ்ல பரதநாட்டியம் ஆடுவார் பாருங்க..கண்கொள்ளா காட்சி. அப்போ செஞ்சூரி அடிச்சா அவன் பேட்ஸ்மேன். எனக்கு பேட்டிங் பிச்சுல 300+ ரன் மேட்சை விட பெளலிங் பிச்சுல 230-250 ரன் மேட்ச் ரொம்ப பிடிக்கும்.

ஏற்கனவே எல்லா ஊருலியும் பிட்ச்செயெல்லாம் பேட்டிங் பிச்சாக்கி பெளலர பாதி சாவடிச்சிட்டாங்கோ... ஓடி வந்து உயிரக் கொடுத்து பெளலிங் போட்டா சொத்துனு விழுந்து அடி ராசானு பேட் முன்னால போய் பால் நிக்குது. இப்போ எல்லா டீமும் 300 அடிக்கிறது சாதாரணமா போச்சு. ஓவர் ஸ்டெப் நோ பால், பெளன்ஸர் நோ பால், வைட் பால், எக்ஸ்ட்ரா ரன், பவர்பிளே ன்னு என்ன என்னவோ கொண்டு வந்து பெளலர நல்லா அமுக்கியாச்சு. இப்போ T20 பெளலருக்கு சாவு மணி அடிக்க வந்திருக்குது.

அந்த ஸ்கோர்கார்டை கொஞ்சம் பாருங்க. என் கண்ணுல இரத்தமே வந்துடுச்சு.
West Indies innings - 205(6 wickets; 20 overs) (10.25 runs per over)
Gayle Run-117 Ball-57 4s-7 6s-10 SR-205.26

நம்ம சூப்பர் பவுலர் பொல்லாக் பாருங்க
SM Pollock O-4 M-0 R-52 w-1 R/R-13.00

இதெல்லாம் அந்த மாரியாத்தாளுக்கே அடுக்குமா. பொல்லாக் மனசு என்ன பாடுபட்டு இருக்கும். எல்லா பாலும் பவுண்டரிக்கு அடிக்க இது என்ன பேஸ் பாலா... கிட்டதட்ட பேஸ்பால் மாதிரி ஆயிட்டு வருது கிரிக்கெட். T20 கூட வரட்டும் விளையாடலாம் ஆனா ரூல்ஸ் பேலன்ஸ்டா இருக்கனுமில்ல. பேட்ஸ்மென் அண்ட் பவுலர்ஸ் இரண்டு பேருக்கும் வாய்ப்பு இருக்கிற மாதிரி இருக்கனுமில்ல. ஒருத்தன அவுட் பண்ணாலும் அடுத்தவன் வந்து மறுபடியும் காட்டுத்தனமா சுத்ததான் போறான். 20 ஓவர்ல எப்படிய்யா 10 விக்கெட் எடுக்க முடியும். அதுவும் ஒரு பவுலருக்கு 4 ஓவர் தான்.

சரி தென்னாப்ரிக்கா அவுட்டுனு பார்த்தா, அவனுங்க வெஸ்டிண்டீஸ்க்கும் மேல காட்டானா இருக்கானுங்க...
South Africa innings - 208 - (2 wickets; 17.4 overs) - (11.77 runs per over)
பவுலருங்கல நினச்சாலே அளுக்காச்சியா வருதய்யா....

இந்த சக்-தே-இந்தியா படத்துல ஒரு சீன்.. கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற மரியாதை ஹாக்கிக்கு கிடைக்கிறதில்லனு. கிரிக்கெட்டுலியே பேட்ஸ்மென்னுக்கு கிடைக்கிற மரியாதை பவுலருக்கு கிடைக்கிறதில்ல.. ஏன் டீம் கேப்டன் பதவிக்கு கூட பேட்ஸ்மென் தான் ப்ர்ஸ்ட் சாய்ஸ். கிரிக்கெட் விளையாட்டில் பவுலருக்குரிய மரியாதையை இந்த ICC கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டு வருது. இதெல்லாம் கிரிக்கெட்டுக்கு நல்லதில்ல அம்புட்டுதான்.. சொல்லிட்டேன்.

Saturday, September 08, 2007

Hoover Dam

சென்ற நீண்ட வாரயிறுதிக்கு Grand Canyon சென்று திரும்பும் வழியில் Hoover Dam பார்த்துவிட்டு வந்தோம். சில புகைப்படங்கள் கீழே... பெரியதாய் பார்க்க படங்களை சொடுக்கவும்





























Grand Canyon National Park

சென்ற நீண்ட வாரயிறுதிக்கு Grand Canyon சென்றிருந்தோம். இயற்கையின் மற்றொமொரு வரப்பிரசாதம். சில புகைப்படங்கள் இங்கே...பெரியதாய் பார்க்க படங்களின் மேல் சொடுக்கவும்.









































Wednesday, September 05, 2007

மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?

இந்த வார தமிழ்மண நட்சத்திரம் திரு வரவனையான் அவர்களின் தமிழ் பெயர் சூடு(ட்)வோம் என்ற பதிவினை படித்த போது என்னுள் எழுந்த கேள்வி


மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?


இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி. நான் என் மகளுக்கு பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே(வீட்டுலதான்) தூய தமிழ்பெயர் வைத்துள்ளேன். அதனால் இங்கு அமெரிக்காவில் நான் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. அமெரிக்கரும் சரி தமிழரல்லாத இந்தியரும் சரி, மருத்துவமனையிலும் சரி, மகளின் பள்ளியிலும் சரி மகளின் பெயர் படாதபாடு படுகிறது. எனினும் அது ஒரு சுகமானசுமை. ஒரு பெருமிதம், ஒரு கர்வம். அதை அனுபவித்து பார்த்தால்தான் புரியும்.


ஆனால், இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஏன் இசுலாமியரும், கிருத்துவரும் ஏன் தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே. என்க்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே. ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?. ஏதேனும் காரணமிருக்கிறதா?தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லவும்.

Tuesday, July 31, 2007

சஞ்சய் தத் - கோடே

சஞ்சய் தத் - ஒரு குற்றவாளி
கோடே - ஒரு நீதிபதி

தண்டனை அளித்த ஒரு நீதிபதிக்கும், தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கும் நடந்த உரையாடல்.

Dutt: I honestly thought I would get the benefit of probation. I have to wind up a few things.

Judge Kode: Don't get upset. I have got a duty to do. This is not the final court.

Dutt: You are like family to us.

Judge Kode:This is a momentary thing. You can appeal in a higher court.

Judge Kode: Don't get perturbed by this order.

Dutt: I am very tired.

Judge Kode: You have a long way to go in your career. You are the number one in your field. Don't lose faith in yourself.

இதை படித்தவுடன், இதைவிட ஒரு பெருந்தன்மையான உரையாடல் நீதிபதிக்கும் குற்றவாளிக்கும் இடையே நடக்க இயலாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நீதிபதியின் வார்த்தைகளில் ஒரு மனிதாபிமானமும், அதே சமயம் கடமையுணர்வும் மிகச் சரியாக பிரதிபலிக்கிறது. குற்றவாளிதானே என்ற எண்ணமோ, நீதிபதி நாம் தான் பெரியவர் என்ற எண்ணமோ இல்லாமல் மிகச் சரியான வார்த்தைகள் மூலம் நீதிபதி குற்றவாளியை அணுகியுள்ளார். மேலும், இதுவரை அவர் விபத்தில் கை உடைந்த நாட்கள் தவிர இந்த வழக்கின் விசாரணை நாட்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லையாம். இது அவரின் கடமையுணர்ச்சியைக் காட்டுகிறது. மற்றுமொரு சிறந்த இந்தியன்

சஞ்சய் தத் - நிச்சயம் குற்றவாளிதான். உண்மையோ, பொய்யோ இந்த வழக்கில் சிக்கிய பிறகு அவர் நிச்சயம் மாறியுள்ளார் என்று தான் நான் அவர் நடவடிக்கைகளில் இருந்து கணிக்கிறேன். அதற்கு இந்த உரையாடலும் ஒரு எடுத்துக்காட்டு. எந்த பிரச்சனையும் இல்லாமல் 4 1/2 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டு வெளியே வந்து முன்னாபாய்-3 படத்தை நமக்கு தருவார் என்று நம்புவோம்.

Friday, July 27, 2007

இந்தியாவில் இந்தியனாய் இருத்தல்

திரு.மோகன்தாஸ் அவர்களின் பெங்களூரில் இந்தியனாய் இருத்தல் பதிவை படித்த போது, எனக்கும் இது போன்ற அனுபவங்கள் சில நான் பெங்களூரில் இருந்த ஆறே மாதத்தில் பல நடந்தது ஞாபகத்திற்கு வந்தது.


நானும் என் நண்பனும் பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் பேச்சு இளையராஜா இசை மீது திரும்பியது. நானும் என் நண்பனும் இருவருமே இளையராஜா ரசிகர்கள் என்பதால் அவரைப் பற்றி பெருமையாகவும், அவரின் சில அற்புத தமிழ் சினிமா பாடல்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். தீடீரென் என் அருகில் இருந்த ஒரு பயணி, கன்னடத்தமிழில், "நீ இருப்பது கர்நாடகா.. சம்பாரிப்பது கர்நாடகா, பேசறுது மட்டும் தமிழ்நாட்டை பத்தி... ஏன் திரும்பி தமிழ் நாட்டுக்கே போக வேண்டியது தானே" என்று செல்லமாக மிரட்டினார். அப்போது தான் நாங்கள் பயணித்து கொண்டிருக்கும் சூழ்நிலையை நான் உணர்ந்தேன். என் நண்பன் உணர்ச்சிவசப்பட்டு இந்தியா, சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டான். ஏதாவது பிரச்சனையானால் எங்களுக்கு ஒரு ஆதரவு வார்த்தைக் கூட கிடைக்காது என்பதை உணர்ந்த நான் என் நண்பனை அடக்கி கூட்டி வந்தேன்.


இன்னொரு சம்பவம், அதற்கு முன்னால் ஒரு சின்ன நோட். நான் கன்னடம் தெரியாத, கால்குறை இந்தி (இப்போ அரைகுறை.. நண்பர்கள் மூலமா கத்துக்கிறேன்) , தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த தமிழன். அன்று என் பைக்கில் எங்கோ பெங்களூரின் வடபகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. நண்பன் குத்துமதிப்பாக வழி சொல்லியிருந்தாலும் சரியாக தொலைந்து விட்டேன். சரி என்று வழியில் போனவரை மடக்கி முகவரியைச் சொல்லி வழி கேட்டால் அவர் தெளிவாக கன்னடாவில் விளக்க ஆரம்பித்தார். அவரை தடுத்து அய்யா நமக்கு கன்னடம் தெரியாது என்று சொன்னேன். என்னை ஒரு 5 வினாடிகள் உற்று பார்த்துவிட்டு தமிலா?? என்றார். ஆமாம் என்று சொன்னேன். உடனே, போய் தமிழ்நாட்டுல போய் அட்ரஸ் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு ஒரு எரிச்சல் பார்வை பார்த்தபடி நடையைக் கட்டினார்.


அதன்பிறகு நான் எப்போதும் பெங்களூரில் வசிப்பதை விரும்பியதில்லை. இதுகுறித்து நான் பல தடவை பெங்களூர்வாழ் தமிழ் நண்பர்களிடம் பேசியபோது அவர்கள் என் கருத்தை மறுத்தே வந்தனர். நாங்கள் பல வருடங்களாக இங்கு உள்ளோம் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என சொல்வார்கள். சிலசமயம் நான் தான் தவறான எண்ணம் வைத்துள்ளேனோ? என்று கூட எண்ணியதுண்டு. இன்று திரு.மோகன்தாஸ் பதிவை பார்த்த போது, என் எண்ணத்தில் எந்த தவறும் இல்லை என்று விளங்கியது.


சரி, அதற்கு ஏன் இந்த தலைப்பு என்கிறீர்களா? இதே கருத்தை நான் ஒரு வட இந்திய நண்பனிடம் ஏதோ ஒரு விவாதத்தின் மீது சொன்ன போது அவன் நக்கலாய் சிரித்தபடி, மெட்ராஸில் நான்- டமிலியன்ஸ எப்படி ட்ரீட் பண்ணுவாங்க தெரியுமா என்றான். மேலும் நடந்த விவாத்தில், அடுத்த மாநில மக்களின் நம் தமிழ்நாட்டை/சென்னையை பற்றிய எண்ணங்கள்


1) தமிழ்நாட்டில் தமிழரல்லாதோர் வாழமுடியாது

2) இந்தியையும், இந்தியாவையும், மற்ற மாநிலத்தவர்களையும் வெறுப்பவர்கள். தனிநாடு கேட்பவர்கள்.

3) மரியாதை தெரியாதவர்கள். யாரையும் மரியாதையாக விளிக்கமாட்டார்கள்

4) சென்னை ஆட்டோஒட்டுநர்கள் ஏமாற்று பேர்வழிகள்

5) தமிழரல்லாதோர் இந்தியில் பேசினால், இந்தி தெரிந்தாலும் தமிழில் தான் பதில் சொல்வார்கள்.

6) சென்னை, ஒரு மக்கள் வாழமுடியாத காலநிலையை கொண்டுள்ளது

7) தமிழரல்லதோர், சென்னையில் வசிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியே கட்டாயம் ஏற்பட்டாலும் அதை ஒரு தண்டனையாகத்தான் நினைப்பார்கள்.


என்னால் இது போன்ற கருத்துக்களை ஒப்புக்கொள்ளவே / ஜீரணிக்கவே முடியவில்லை. எனக்கு தமிழ்நாடும் சென்னையும் சொர்க்கம். நீங்கள் எண்ணுவது தவறு என்று அவருக்கு விளக்க பலமாக முயற்சித்தேன். விவாதத்தின் முடிவில், பிறமாநிலத்தவர் தமிழகத்தை பற்றி இப்படி தான் எண்ணுகிறார்கள் அவர்களின் எண்ணங்களை மாற்றுவது மிகக் கடினம் என்பதை மிகுந்த மன பாரத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் இந்தியா... பல கலாச்சாரம், இனம், மதம், மொழி இருப்பதால் பிரச்சனை ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்துகொண்டே தான் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியில்லை..

Wednesday, July 18, 2007

நேரு-எட்வினா-பமீலா

என்ன சொல்றதுனே தெரியல...

http://www.ibnlive.com/news/edwinanehru-affair-got-kashmir-deal-done/45181-3-single.html

அடபோங்கப்பா...நாட்டின் முக்கிய தலைவர்கள் முடிவெடுக்கும் முறைய பார்த்தா வருத்தமாதான் இருக்கு...அதிலேயும் இந்த மவுண்ட்பேட்டன் பிரபுவ??? நினைச்சா காமெடியாவும் இருக்கு, பரிதாபமாகவும் இருக்கு.

Wednesday, June 06, 2007

$17.00

சிவாஜி பட டிக்கெட் விற்பனை தமிழ்நாட்டில் ஆரம்பித்ததோ இல்லையோ அமெரிக்காவில் ஆரம்பித்துவிட்டது. இங்கு கலிஃபோர்னியா சாண்டியாகோ வில் ஜூன் 17ம் தேதி சிவாஜியை திரையிடுகிறார்கள். டிக்கெட் விலை தெரியுமா? 17 அமெரிக்க டாலர்கள் கிட்டதட்ட இன்றைய நிலவரத்துக்கு 700 ரூவா...too much...ம்ம்ம்ம்





பொதுவாக இந்திய திரைப்படங்களின் விலை இங்கு ஆங்கிலப்படங்களை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆங்கிலப்படங்கள் 8 முதல் 10 டாலர் வரை இருக்கும். இந்திப்படங்கள் பொதுவாக $10.50 க்கும், தெலுங்கு மற்றும் தமிழ் படங்கள் $11 க்கும் விற்கப்படுவது வழக்கம். சந்திரமுகி கூட 11 டாலரில் தான் பார்த்தேன். ஆனால் சிவாஜி, இப்பொழுது 17 டாலருக்கு திரையிடப்படுகிறது.

இதுக்கெல்லாம் பயந்துடுவமா என்ன??? 51 டாலர் கொடுத்து 3 டிக்கெட் (பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு சினிமாக்கு போனா வீடு திரும்ப முடியாது) வாங்கியாச்சில்ல.. மனசு கஷ்டமாதான் இருக்கு. என்ன பண்றது.. இப்பொல்லாம் ரஜினி படம் தவிர்க்கமுடியாததா போச்சு... ரஜினியை திட்டரவங்க கூட படம் பார்க்க மறக்கிறதில்லை....ம்ம்ம்ம்ம்

Friday, May 04, 2007

இந்த வாரம் ஓ பக்கங்கள்.. ஞாநி

கடந்த சில நாட்களில் நடந்த சில விஷயங்களில் எனக்குண்டான எரிச்சல், திரு.ஞாநி அவர்களின் கட்டுரையிலும் இருப்பதால் அதை அப்படியே வெட்டி ஒட்டியுள்ளேன்....

-------------------------------------------------------

ஏன் தமிழா, ஏன்? அன்புள்ள தமிழா,
‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எதை மனதில் கொண்டு எழுதியிருந்தபோதும், நடைமுறையில், நம் குணம்தான் என்ன?
எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் ஓர் இனம் என்று நமக்கு ஒரு பெயர் வந்துவிட்டது. சிங்களவர் நம்மவரைத் துன்புறுத்தினாலும் உணர்ச்சிவசப்படுகிறோம். சிம்பு & நயன்தாரா பிரிந்தாலும் உணர்ச்சிவசப்படுகிறோம்.

உணர்ச்சிகள் இல்லாமல் மனிதர்கள் இருக்க முடியாதுதான். ஆனால், உணர்ச்சி மட்டுமே மனிதர் அல்ல. பகுத்தறியக் கற்றுக் கொள்ளும்படி முதுமையிலும் மூத்திரக் குழாயும் பக்கெட்டுமாகத் திரிந்து திரிந்து பிரசாரம் செய்தாரே பெரியார், அவர் சிலையை எவரோ சிறுமதியினர் உடைத்தாலும் உணர்ச்சிவசப்படுகிறோம். பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி பார்த்தால், அவரது சிலை உடைப்பை ஒளிந்திருந்து செய்வோரின் அற்ப செயல், பெரியார் அப்படி என்னதான் சொன்னார் என்று அவர் கருத்தை மறந்துவிட்ட தமிழருக்கும், அறியாத தமிழருக்கும் மறுபடியும் மறுபடியும் அவர் கருத்தை நினைவுபடுத்தத்தான் தன்னையறியாமலே உதவுகிறது.
எதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டுமோ, அதில் விட்டுவிடுகிறோம். எப்போதெல்லாம் அறிவைப் பயன்படுத்த வேண்டுமோ, அப்போதும் நழுவவிடுகிறோம். எப்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட மறு நொடியில் அதை ஒதுக்கிவிட்டு, அறிவைக்கொண்டு உணர்ச்சியைத் தூண்டிய பிரச்னையைத் தீர்க்க வேண்டுமோ, அதையும் செய்யத் தவறுகிறோம்.
மூன்று கொலைகள் அண்மையில் நடந்தன. கொல்லப்பட்ட மூவரும் தமிழர்கள். செய்தி அறிந்ததும் நாம் என்ன செய்தோம் என்று பார்ப்போம்.

ஒருவர் அமெரிக்காவில் கொல்லப்பட்டார். இருவர் மலேஷியாவில் கொல்லப் பட்டார்கள். தமிழ்நாட்டில் பத்திரிகை வாசிக்கும் பழக்கமும் டி.வி. பார்க்கும் பழக்கமும் உள்ள தமிழர்களிலேயே பெரும் பாலோருக்கு அமெரிக்காவில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வெறிகொண்ட கொரிய மாணவன் ஒருவனால் கண்மூடித் தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட 33 பேரில் ஒருவர் தமிழரான பேராசிரியர் லோகநாதன் என்ற செய்தி தெரியும். ஆனால், மலேஷியாவில் இருவர் கொல்லப்பட்ட செய்தி அந்த அளவு கவனம் பெற வில்லை.
லோகநாதன் கொல்லப்பட்ட ஏப்ரல் 16&க்கு ஒரு மாதம் முன்பு, திருவாரூர் அருகிலுள்ள முத்துப்பேட்டையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சரவண காந்தி, தான் 12 வருடங்களாக வேலை பார்த்து வந்த மலேஷியா வில், மார்ச் மாதத்தில் மர்ம மான முறையில் இறந்தார். அவரின் உடலை இந்தியா வுக்குக் கொண்டுவர அவரது தாயும் உறவினர் களும் படாதபாடு பட்டார்கள். உடலில் காயங்கள் இருந்ததால், அதைப் பெற மறுத்து மார்ச் 15 நள்ளிரவு முழு வதும் முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் வாசலில் முற்றுகைப் போராட்டம் செய் தார்கள். மறுநாள் காலை, உயர் அதிகாரிகள் வந்து பிரேதப் பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்ட பிறகுதான், உள்ளூர் மக்கள் அமைதியானார்கள். இன்னும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வரவில்லை.
லோகநாதன் மறைந்து பத்து நாட்கள் கழித்து, மலேஷியாவில் ஒரு காட்டுப்பகுதியில் கண் டெடுக்கப்பட்டார் கும்பகோணத்தைச் சேர்ந்த 25 வயது கணேஷ் குமார். சுமார் 20 நாட்களாக அவருடைய முதலாளியால் சங்கிலியால் கட்டிப் போடப் பட்டு, சோறு தண்ணியில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டவர் அவர். காட்டில் வீசி எறியப் பட்ட அவரை சில கிராமவாசி கள் கண்டெடுத்து மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அங்கே போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்த கணேஷ்குமார் இரு நாட்கள் கழித்து சிகிச்சை பயனின்றி ஏப்ரல் 27&ம் தேதி இறந்தார்.

இறந்த மூவரும் தமிழர்கள் தான். எனினும் வெவ்வேறான வாழ்க்கைப் பின்னணியும், பார்வை யும் கொண்டவர்கள். லோகநாதன் இங்கே உயர் கல்வி பெற்று, விரும்பி வெளிநாடு சென்று, அந்த கல்விச் சூழலுடன் முப்பதாண்டுகள் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டு அங்கேயே வாழ்ந்து, தன் மரணத்துக்குப் பின் அங்கேயே புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர். எந்த மரணமும் நம் அஞ்சலிக்குரியதுதான்; எந்தக் கொடூர மரணமும் நம்மை வேதனைப் படுத்துவதுதான் என்பதற்கப்பால், தமிழரின் அறிவுத்திறனை உலகுக்கு உணர்த்தியவர் களில் ஒருவர் என்றவிதத்தில் அவருடைய அகால மரணத்துக்கு நாம் நிச்சயம் வருந்துவது சரியே.
அதே சமயம், சரவண காந்தியும் கணேஷ் குமாரும் வெளிநாடு செல்ல வேண்டுமென்று திட்டமிட்டு அதற்காகப் படித்து, உழைத்து, சென்று, அங்கேயே வாழ விரும்பியவர்கள் அல்ல. காவிரி பொய்க்காமல் இருந்திருந்தால், தங்கள் கிராமங்களிலேயே வாழ்க்கை முழுக்க அவர்கள் இருந்திருக்கக்கூடும். பஞ்சம் பிழைக்கவும், எப்படியேனும் தங்கள் ஏழ்மைக் குடும்பங்களைக் கரையேற்றவும் கருதி, கந்து வட்டிக்குக் கடன் வாங்கி, கொத்தடிமை வேலை களுக்காக மலேஷியா சென்ற தமிழர்கள் அவர்கள்.
சரவண காந்தியைப் போலவும் கணேஷ் குமாரைப் போலவும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மலேஷியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் பஞ்சம் பிழைக்கப் போய்க்கொண்டு இருக்கி றார்கள். இதில் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது தமிழர்கள்தான்.
இப்படிச் சென்றவர்களில் வருடந்தோறும் பலர் பிணங்களாகத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். அம்மாக்களும் மனைவிகளும் அவர்களை அனுப்புவதற்குபட்ட பாட்டுக்குச் சற்றும் குறையாமல் அவர்களுடைய பிணங்களை இங்கே திரும்பக் கொண்டுவருவதற்கும் பட வேண்டியிருக்கிறது.
எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் தமிழகம் இதற்கு என்ன செய்கிறது? லோகநாதனின் மறைவுக்காக சட்டமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்படு கிறது. உடனடி பாஸ் போர்ட்டும் விசாவும் அளிக்கும் நியாயமான நடவடிக்கைகளுடன் நிறுத்திக்கொள்ளாமல், பொருளாதார வசதியுள்ள அவருடைய குடும்பத் தினர் அமெரிக்கா சென்று இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அரசு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்குகிறது. சரவண காந்திகளின் குடும்பமோ காவல் நிலையத்துக்கு வெளியே மறியல் செய்து போராடி நீதி கேட்க வேண்டியிருக்கிறது.
ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? பேராசிரியர் லோகநாதனின் பரிதாபத்துக்குரிய கொலை & ஒருவகையில் விபத்துதான். ஆனால், தொழிலாளிகள் சரவண காந்தி, கணேஷ் குமார் மரணங்கள் விபத்துக்கள் அல்ல, திட்டமிட்ட கொலைகள். உழைப்பை உறிஞ்சிக்கொண்டு நம் தொழிலாளர் களைச் சக்கையாக்கி தூக்கி எறியும் வெளிநாட்டு முதலாளிகளைக் கேள்வி கேட்கவும் தண்டிக்கவும் நமது அரசாங்கங்களுக்கு திராணியில்லாத தால் தொடர்ந்து நிகழும் கொலைகள்.
உள்ளூரில் வேலைக்கு உத்தரவாதம் தரத் தவறிய நமது அரசுகள், வெளிநாடு செல்லும் தமிழருக்கு உயிருக்கேனும் உத்தரவாதத்தை தர வேண்டாமா? அங்கே உயிரிழப்போரின் இறுதிச் சடங்கை கண்ணியமாக சொந்த மண்ணில் நடத்த வேண்டு மென்று விரும்பும் ஏழைக் குடும்பங் களுக்கு அரசாங்கம் உதவிகள் செய்யாவிட்டாலும் தொல்லைகளே னும் தராமல் இருக்க முடியாதா?
வசதியற்றோர், வசதி படைத்தோர் இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியின் உறுத்தல் தானே, தென் கொரிய மாணவன் சோ&செங்& ஹ¨வை கொலை வெறிய னாக மாற்றியது? பென்ஸ் கார்களும் வைர நெக்லெஸ்களும் குவித்த பிறகும் உங்கள் பேராசை தணியவில்லையே என்று இரு கலாசாரங்களுக்கிடையே சிக்கித் தவித்த அவன் குரல் ஓல மிட்டதே.
ஏழைக்கொரு நீதி பணக்காரருக்கொரு நீதி என்பதை வாழ்க்கையில் மட்டுமல்ல, மரணத்திலும் பின்பற்றும் சமூக அநீதிக்கெதிராக அல்லவா தமிழா, நாம் உணர்ச்சிவசப்பட வேண்டும்?
வேட்பு மனுதாக்கல் செய்யும் போது, லட்சமும் கோடியுமாகச் சொத்துக் கணக்கு காட்டி, தேர்தல்களில் சில கோடிகளைச் செலவிட்டு, பதவியில் அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏ&க்களுக்கு, அரசு சென்னையில் இலவச வீட்டுமனை தர வேண்டும் என்று வெட்கமில்லாமல் அவர்கள் பேசும்போது, ஏன் தமிழா, நாம் உணர்ச்சிவசப்படுவதில்லை?
‘பருத்திவீரன்’ பட கிளைமாக்ஸ§க்குக் கண்ணீர் வடிக்கும் தமிழா... கணேஷ் குமார், சரவண காந்திகளுக்காகக் கண்ணீர் சிந்துவது எப்போது?
வருத்தத்துடன்,
கையாலாகாத ஒரு சக தமிழன்.

Wednesday, March 21, 2007

மருத்துவச் சுற்றுலா - 1

இந்தியா மென்பொருள் துறையில் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறது. BPO துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. என்னதான் சீனா மிரட்டிக் கொண்டிருந்தாலும் இத்துறைகளில் அது இந்தியாவை தோற்கடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல, தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருக்கும். இப்போது இந்தியாவின் அடுத்த இலக்கு மருத்துவச் சுற்றுலா. கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 500,000 அமெரிக்கர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இத்துறை மிகப்பிரமாண்டமான முறையில் முன்னேற்றம் காணப்போகிறது. இதிலும் முன்னணியில் இருப்பது இந்தியாதான். இத்துறையில் நமக்கு போட்டி சீனா அல்ல. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற மற்ற சிறு ஆசிய நாடுகள் தான்.

அமெரிக்காவில் மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் எண்ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டும். அவர்களுக்கெல்லாம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சையெல்லாம் கனவில் தான் நடக்கும். இணையத்தில் படித்த ஒரு எடுத்துக்காட்டு, அமெரிக்காவில் வாழும் 53 வயதான தச்சர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய சுமார் 250,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கூறியுள்ளனர். அவருக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை. அவரிடம் நிச்சயம் அவ்வளவு பணமில்லை. உடனே இந்தியாவிற்கு வந்து புதுடெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். டெல்லி மற்றும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்துவிட்டு ஊர் திரும்பினார். அவருக்கு அதற்கான செலவு 20,000 அமெரிக்க டாலர்கள். சுமார் 10 மடங்கு அமெரிக்க கட்டணத்தை விட குறைவு.
இதுவரை நிறைய அமெரிக்கர்கள் காஸ்மடிக் அறுவை சிகிச்சைகளுக்காக பிலிப்பைன்ஸ் மற்றும் பாங்காக் ஆகிய இடங்களுக்கு பறந்து கொண்டிருந்தார்கள். இனி மற்ற உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் அங்கு செல்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சலுகையாக மெடிக்கல் இன்சூரன்ஸ்க்கான பிரீமியமும் அந்நிறுவனங்களே கட்டிவிடும். கடந்த ஆறு ஆண்டுகளில் இதற்காக அந்நிறுவனங்கள் செலுத்தும் தொகை சுமார் 85% உயர்ந்துள்ளதாம். இதன் மூலம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொள்ளை இலாபம் பார்த்து வருகின்றன. இதனால் சில நிறுவனங்கள் மருத்துவச் சுற்றுலாவை பணியாளர்களுக்கு முன்னிறுத்துகின்றனர். இந்த வகையை தேர்ந்தெடுக்கும் பணியாளர்கள், ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அவர்கள் இந்தியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அவர் குடும்பத்தில் ஒருவர் அவருடன் பயணிக்கலாம். இம்முறை தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும், ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் இந்நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தொகை கணிசமாக குறையும்.

இதுவரை மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்று இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள். இனி இது போல் பெரும் நிறுவனங்களில் வேலை செய்வோறும் மருத்துவச் சுற்றுலாவிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். இப்பொழுதே ஆண்டிற்கு சுமார் 200,000 வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது மேலும் பல மடங்காக பெருகும் என்பது நிபுணர்கள் கருத்து.

தொடரும்

Monday, March 19, 2007

உலகின் மிகப்பெரிய விமானம் - AirBus A380




பல காலமாக விமான தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரும் சவாலாக ஏர்பஸ் நிறுவனம் A380 எனும் உலகின் மிகப்பெரிய விமானத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரை போயிங் நிறுவனத்தின் 747 விமானமே உலகின் மிகப்பெரிய விமானமாக இருந்தது. ஆனால் இனி ஏர்பஸ் நிறுவனத்தின் A380 விமானமே(555 பயணிகள்) உலகின் மிகப்பெரிய விமானமாக இருக்கும். இந்த விமானம் 2005ஆம் ஆண்டிலேயே மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்று தான் அமெரிக்காவில் முதன் முதலாக தன் பயணசேவையை தொடங்கியது.






கிட்டதட்ட 13 வருடங்களாக உழைத்து இந்த புதிய விமானத்தை வடிவமைத்துள்ளார்கள்


Passenger: 555 (If three class)
853 (all-economy class)
Range: 8,000 nm./14,800 km (with max. passengers)
Max. weight: 562 tonnes
Max. take-off weight: 560 tonnes
Max. landing weight: 386 tonnes
Max. fuel capacity: 81,890 USg
310,000 litres
Typical operating weight empty: 278.8 tonnes
Typical volumetric payload: 66.4 tonnes
Speed: Max cruising speed: 652mph
Long range cruising speed :630mph
Length: 73m (239ft 3in)
Height: 24.1 m (79ft 7in)
Cabin lenght: 50.68m (166ft 3in)
Max. cabin width main deck: 6.58m (21ft 7in)
Max. cabin width upper deck: 5.92m (19ft 5in)
Wing span: 79.8m (261ft 8in)
Wing area: 845m sq (9,100 ft sq)
Wheelbase: 30.4m (99ft 8in)
Engine: Rolls-Royce Trent 900
Thrust Range: 70,000 lb slst
Cost: [June 06]US$295.6m - US$316m
[20/06/05]approx. US$295 million
[launch]approx. US$285 million


இவ்விமானத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://en.wikipedia.org/wiki/Airbus_A380



இன்று முதல் A380 விமானம் LAவில் உள்ள LAX விமான நிலையத்தில் தரையிறங்கியது. இவ்வகை விமானங்களுக்கு தக்கவாறு LAX விமான நிலையத்தில் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து தேவையான மாற்றங்கள் செய்தனாராம். சிறிது நிமிடங்களில் அடுத்த A380 விமானம் நியுயார்ர்கில் JFK விமான நிலையத்தில் தரையிறங்கியது. LAவில் இறங்கிய விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. ஆனால் நியுயார்ர்கில் இறங்கிய விமானத்தில் 550 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதெல்லாம் இருக்கட்டும், எனக்குள்ளதெல்லாம் ஒரே ஆசைதான். அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு ஒரு 10 - 12 மணி நேரத்தில் செல்லவேண்டும். இப்போதைய 24 மணி நேரம் எல்லாம் ரொம்ப அதிகம். உட்காரமுடியவில்லையப்பா...

Sunday, March 11, 2007

விலையுயர் கற்கள் கண்காட்சி




சென்ற வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமெரிக்காவின் சாண்டியோகோ நகரில் விலையுயர் கற்கள் கண்காட்சி நடைபெற்றது. முத்து, பவளம், வைரம், ரூபி, ஜேட் மற்றும் பல எனக்கு விவரம் தெரியாத கற்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. மிகவும் அழகான கண்ணைப் பறிக்கும் கற்கள் அனைத்து வண்ணங்களிலும் அனைத்து விலைகளிலும் இங்கு கிடைக்கின்றன. இவர்கள் வருடத்திற்கு 40 கண்காட்சிகள் அமெரிக்கா முழுவதும் நடத்துகிறார்கள். மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

http://gemfaire.com/
.









என் மனைவி சென்ற வருடம் சுமார் $100 கொடுத்து இக்கண்காட்சியில் ரூபி வாங்கினார்கள். பின்னர் இந்தியா சென்ற பொழுது சென்னையில் ஒரு நகைக்கடையில் அந்த ரூபி மணிகளை காட்டிய போது, அது நல்ல வகை கற்கள்தான் என்றும் அதன் விலை இந்தியாவில் இன்னுமதிகமாக இருக்கும் என்றும் சொன்னார்கள். உண்மையோ பொய்யோ நாம் ஏமாறவில்லை என்ற மனதிருப்தியடைந்தேன்



இன்னொரு முக்கியமான விஷயம், இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. அதில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் இந்தியர்களுடையது. விசாரித்ததில் அமெரிக்காவில் இந்தியர் மிகப்பெருமளவில் நகை வியாபாரம் செய்வதாக அறிந்து ஆச்சரியப்பட்டேன். மற்றொரு ஆச்சரியமான விஷயம், கண்கட்சியில் வைக்கப்பட்ட நகைகளில் மிகப்பெருமளவில் 'Made in India' Tag இருந்தது. இந்தியாவிலிருந்து விலையுயர் கற்கள் பெருமளவில் மேலைநாடுகளுக்கு இறக்குமதியாகிறதாம். வைரம் பட்டை தீட்டும் தொழிலில் இந்தியாதான் முண்ணனியில் இருப்பதாக எங்கோ படித்ததாக ஞாபகம்.

http://gemfaire.com/ இந்த சுட்டிக்கு சென்று உங்கள் ஊரில் இக்கண்காட்சி நடைபெறுகிறதா என்று பார்க்கவும். எதுவும் வாங்கவில்லையென்றாலும் கண்டிப்பாக ஒருதடவை சென்று பார்த்து வரவும். வித்தியாசமான அனுபவத்திற்கு நான் உத்தரவாதம்.

Thursday, March 08, 2007

ஓவர் நைட் மில்லியனர்

பக்கத்தில் இருப்பவர் யார் தெரியுமா?
சென்ற செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ட்ரக் ஓட்டுநராக தூங்க சென்றவர், புதன்கிழமை காலை எழுந்திருக்கும் போது மில்லியனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வசிக்கும் 52 வயதான எட் நபோர்ஸ் (Ed Nabors) தான் அந்த அதிர்ஷ்டசாலி.

அமெரிக்க லாட்டரி வரலாற்றிலேயே, மிக அதிக பரிசுத் தொகையான 390 மில்லியன் டாலருக்கான குலுக்கல் நேற்று நடைப்பெற்றது. அந்த குலுக்கலில் வந்த எண் 16-22-29-39-42. இந்த எண் கொண்டு இரு சீட்டுகள் விற்கப்பட்டதும், விற்கப் பட்ட மாகாணங்கள் ஜார்ஜியா மற்றும் நியூ ஜெர்ஸி என்றும் அறியப்பட்டது. என்வே மொத்த பரிசுத்தொகை அந்த இருவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்

ஜார்ஜியாவில் வேலை செய்து கொண்டிருந்த எட் நபோர்ஸ் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் சிறிது நேரம் உறைந்து போனாராம். முதலில் தன் மகளுக்கு வீடு வாங்கி கொடுக்க போவதாக சொல்லும் எட் நபோர்ஸ் இனி வேலைக்குச் செல்ல போவதில்லையாம்... இனி என்ன செய்ய போறீங்க என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் 'மீன் பிடிக்க போகிறேன்' ("I'm going to do a lot of fishing.")

படத்தை பார்த்தவுடன் எனக்கு எழுந்த சந்தேகம், என்னடா 390 ல பாதி 195 மில்லியன் ஆச்சே என்ன வெறும் 116.5 மில்லியன் செக் தரோங்கன்னு.. பிறகுதான் தெரிந்த்து, தவணை முறையில் ஆண்டுதோறும் 26 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கிக்கிறதுனா 195 மில்லியன் கிடைக்குமாம். ஆனா நம்ம எட் நபோர்ஸ் அன்னிக்கே மொத்த துட்டும் எடுத்து வைன்னு சொன்னதினால், ஏதோ கணக்கு போட்டு 116.5 மில்லியன் கொடுத்துள்ளார்கள். சரி இதற்குப்பிறகு பாவம் அவர் வரி வேறு கட்டவேண்டும். எல்லாம் போக அவருக்கு வரப்போகும் தொகை வெறும்(?) 80 மில்லியனுக்கும் மேல்.

சரி இந்திய ரூபாயில எவ்வளவுனு பார்க்கலாமா? 1$ = 44ரூபா ன்னு வச்சிக்கிட்டா, 80 மில்லியன் = 352 கோடி ரூபாய்... அடேங்கப்பா... இதே நம்பர் உள்ள இன்னொரு டிக்கெட் நியூ ஜெர்ஸில யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி வாங்கியிருக்கார். அவர் யாருன்னு இன்னும் தெரியல... அவருக்கு இந்த பரிசை வாங்குவதற்கு ஒரு வருடம் வரை காலம் உள்ளது. நியூ ஜெர்ஸில இருக்கும் நமது தமிழ் பதிவுலக நண்பர்கள் யாராவது இந்த லாட்டரி வாங்கியிருந்தா சீக்கிரமா போய் பரிசை வாங்கிட்டு வந்து மறக்காமா ஒரு மெகா டீரீட் கொடுத்துடுங்கோ.

என்ன பரிசுத் தொகையை பார்த்தவுடனே, மெகாமில்லியன் லாட்டரி விளையாடனும்னு தோணுதா.. இந்த மெகாமில்லியன் லாட்டரியின் விதிமுறைகள் மற்றும் விளையாட்டு முறைகளின் மேலதிக தகவல்களுக்கு இந்த சுட்டியை http://www.megamillions.com/ சொடுக்கவும்.

Obsessive-Compulsive Disorder (OCD)


அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு USA Netxwork தொலைக்காட்சியில் வரும் MONK தொடர் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். பார்க்காதவர்களுக்கு, மாங் என்னும் கதாபாத்திரம் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர். இவர் நம்ம ஊர் துப்பறியும் சாம்பு மாதிரி தான். வித்தியாசமா யோசித்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பார். ஆனால் இவருக்கு Obsessive-Compulsive Disorder (OCD)ன்னு (தமிழ்ல என்னன்னு சொல்றதுங்க) ஒரு குறைபாடு. அதாவது எதைக் கண்டாலும் பயம், சந்தேகம் அல்லது அறுவெறுப்பு. நம்ம தெனாலி கமல் தன்னோட வியாதி பத்தி சொல்லுவாரே அதே குறைபாடுதான்... கமல் படத்துல இலங்கைல நடந்த போர் மாட்டிக்கிட்டதால அந்த குறைபாடு வந்ததுன்னு சொல்லுவார். இந்த மாங் தொடரில் கூட மாங்கின் மனைவி இறந்ததால அவருக்க இந்த குறைபாடு வந்ததா சொல்வார்கள்.
.
உண்மையிலேயே இந்த குறைபாடு வருவதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் நிரூபிக்கப்படலன்னு இத்துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். இதற்கான ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டுள்ளது. மூளையின் முற்பகுதியில் இருந்து உட்பகுதிகளுக்கு விஷயங்களை கொண்டுசெல்வதில் உள்ள குறைபாடு தான் இதற்கு காரணம் என்று ஆராய்ச்சி ஒரு கருத்தை நிறுவுகிறது. இப்படி மூளையில் விஷயங்களை கொண்டு செல்ல பயன்படும் வேதிப்பொருள் செரொடொனின்(serotonin). இந்த செரொடொனின் குறைபாடு இந்த வியாதிக்கான காரணமாக இருக்ககூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மூளையின் செயல்பாடுகளை படம் பிடித்து பார்த்ததில், செரொடொனின் அதிகரிக்க மருந்து கொடுத்த போதும், மற்றும் cognitive behavioral psychotherapy செய்த போதும் மூளையின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
.
இந்த குறைபாடு 9 வயது முதல் 40 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆண் பெண் இருபாலருக்கும் வரலாம். ஆனால் இதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு சிறுவயதிலேயே இக்குறைபாடி தோன்றிவிட்டதாம். இது ஒரு பரம்பரை வியாதி இல்லை என்றாலும் பெற்றோருக்கு இக்குறைபாடு இருந்தால் அது குழந்தைகளை தாக்குவதற்கான் வாய்ப்பு உண்டாம். இப்போதைய நிலவரப்படி சராசரியாக நான்கு மருத்துவர்களை பார்த்து, சராசரியாக 9 வருடம் மருத்துவம் செய்த பின்னர்தான் இக்குறைப்பாட்டை சரியாக கண்டு கொள்ள முடிகிறதாம்.


பக்கத்து படத்தில் இருப்பவர் பெயர் ஜெஃப் பெல் (Jeff Bell). அமெரிக்காவில் பே ஏரியாவில் இருக்கும் இவர் ஒரு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவருக்கு இக்குறைபாடு 7 வயதில் தோன்றியது என்கிறார். ஆனால் இளைஞனாக இருந்த போது நடந்த ஒரு படகு விபத்து இக்குறைப்பாடு வீரியத்துடன் வெளிக்கொணர்ந்ததாம். அதுவரை சகஜ வாழ்க்கையிலிருந்த அவரால் அதன் பின்னர் எந்த ஒரு வேலையும் செய்ய இயலாமல் எதற்கெடுத்தாலும் பயப்படுவாராம். பிறகு மனநலமருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின் சகஜ் வாழ்க்கைக்கு திரும்பிய அவர் OCD பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
"Rewind, Replay, Repeat" என்பதே அவர் புத்தகத்தின் தலைப்பு. எல்லாருக்கும் பயம், சந்தேகம் என்பது உண்டு. எல்லோரும் கதவை பூட்டியபின் ஒரு முறைக்கு இருமுறை இழுத்து பார்க்கிறோம், ஒருதடவை பார்த்தாலே போதும் ஆனால் இரண்டுத்டவை சரி பார்க்கிறோம். வீட்டை விட்டு செல்லும் போது அடுப்பு அணைத்தோமா என்று சரிபார்க்கிறோம். ஒருதடவை சரி இருதடவை செய்தாலும் சரி, ஆனால் அதையே பலதடவை செய்தால் அதுதான் OCD என்கிறார் பெல். ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல் இது நிச்சயம் biochemical பிரச்சனையே என்கிறார். இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் இக்குறைப்பாட்டை குணமாக்க முடியும் என்கிறார் இந்த தன்னம்பிக்கையாளர்.

Monday, March 05, 2007

மாடுயுலர் கிச்சன்...







பாட்டி தரையில் உட்கார்ந்து விறகு அடுப்பில் சமைத்து போட்டு சாப்பிட்டு இருக்கிறேன். அம்மா நின்று கொண்டே LPG அடுப்பில் சமைத்து போட்டு பார்த்து இருக்கிறேன். இன்றும் எங்கள் வீட்டில் சமையலறை கொஞ்சம் அழுக்காகத்தான் இருக்கும். எண்ணைய் கறை, திறந்து கிடக்கும் அலமாரிகள், மளிகை சாமான்கள் நிரப்பிய அலுமினியம் மற்றும் சில்வர் டப்பாக்கள், சுவரில் மாவுச்சிதறலோடு கிரைண்டர், மூடி வைத்த தண்ணீர் தவலைகள், அரிவாள் மனை.. ம்..ம்.. என்ன இருந்தாலும் அந்த வாசமே தனி தான்...



இனிமேல் அதுபோல் சமையலறை இருக்க இனி வரும் மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இனியெல்லாம் மாடுயுலர் மயம். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு வாழ்க்கை மாற்றம் தான் மாடுயுலர் கிச்சன். 10 வருடங்களுக்கு முன்பு மிகப் பெரும் பணக்காரர்கள் மேலை நாடுகளிலிருந்து சமையலறையை அப்படியே இறக்குமதி செய்து தங்கள் வீடுகளில் அமைத்துக் கொள்வர். இம்முறை சிறிது நாட்களிலேயே தோல்வி அடைந்தது. இறக்குமதிக்கு ஆகும் அதிக செலவு, அதிக கால நேரம், இந்தியாவில் அதை பொருத்தும் போது வரும் நடைமுறைச்சிக்கல் போன்றவற்றால் இம்முறையை மக்கள் நிராகரிக்கத் தொடங்கினர். ஆனால் இப்பொழுது நிலமையே வேறு. பல உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்தும், பல சுயமாகவும் இத்தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியும் வருகின்றனர்.




சமையலறையை பகுதி பகுதியாக செய்து இன்ஸ்டால் செய்து கொள்வதுதான் மாடுயுலர் கிச்சன். ஏதாவது ரிப்பேர் செய்ய வேண்டுமென்றாலும் அந்த ஒரு பகுதியை மட்டு கழற்றிக் கொண்டு போய் பழுது பார்த்து மறுபடியும் வந்து மாட்டிவிடுவார்கள். இப்போது உங்களுக்கு டிஷ் வாஷர் வாங்க விருப்பமோ வாய்ப்போ இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். மாடுயுலர் கிச்சன் இருந்தால் நீங்கள் விருப்பப் பட்டபோது வாங்கி உங்கள் சமையலறையில் எளிதில் பொறுத்தி விட முடியும். சமையலறையின் எல்லா இயந்திரங்களையும் எளிதில் பொருத்திவிடக்கூடிய அளவில் இதை வடிவமைத்து இருப்பர். இருக்கும் குறைவான இடத்தை முழுமையாக உபயோகப்படுத்தி நிறைய பொருட்களை நாம் சமையலறையில் வசதியான வகையில் வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைப்பதே மாடுயுலர் கிச்சனின் வெற்றிக்கான ரகசியம். சொல்லவே தேவையில்லை மாடுயுலர் கிச்சனின் அழகுதான் நம் இல்லத்தரசிகளை அதனிடத்தே ஈர்ப்பது. இத்தோடு, இதை நிறுவ இரண்டு மூன்று நாட்களே போதும் என்பது மற்றுமொரு சிறப்பு



மாடுயுலர் கிச்சன், சுமார் 75000 ரூபாயிலிருந்து, 25 இலட்சம் ரூபாய் வரை எல்லாவிதமான விலைகளிலும் நிறுவலாம். எல்லாம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டிசைனை பொறுத்தது. சராசரியாக ஒரு 8*10 அடி மாடுயுலர் சமையலறை அமைக்க சுமார் 1.75 முதல் 2 இலட்சம் வரை செலவாகலாம். இப்பொழுது புதிதாக கட்டும் எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மாடுயுலர் கிச்சன் நிறுவுகிறார்கள். இந்த மாடுயுலர் கிச்சன் வியாபாரத்திற்கு இந்தியாவில் மிகப்பெரும் எதிர்காலம் உள்ளதாக கணிக்கிறார்கள். இதன் அழகும், விலையும் நிச்சயம் பிரம்மிக்க வைக்கின்றன.

இன்னும் ஒரு வருடம் ஆகுமாம்...

காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வந்த போது, அட தீர்ப்பு சாதகமோ பாதகமோ எப்படியிருந்தாலும் சரி, முதலில் வந்த தீர்ப்பை நிறைவேற்றினால் போதும். சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று சொல்லுபவரிடம் இருந்து முதலில் 180TMC ஆவது வாங்கிடலாம், மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம் என்று எண்ணினேன். அதற்கு முதலில் நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்றார்கள். சரி அதற்கென்ன நம்மாட்கள் மத்திய அரசில் இருக்கிறார்களே சீக்கிரம் ஓரிரு மாதங்களில் முடித்து விடுவார்கள் என்று எண்ணினேன்.

இன்றைக்கு தினமலரில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்து போனேன். நமது மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ், நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட இன்னும் ஓராண்டிற்கு மேலாகும் என்று சொல்கிறார்.

முதலில் மேல்முறையீடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 90 நாட்கள் அவகாசம் உள்ளதாம். இன்றைய தேதிக்கு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களுமே மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்க நடுவர் மன்றத்திற்கு ஓராண்டு வரை அவகாசம் உள்ளதாம். அதன் பிறகே, தீர்ப்பை கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை வருமாம். அதாவது அதன் பிறகு கூட இத்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவோம் என்று சொல்லவில்லை. 'கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை ' வரும் என்று தான் சொல்கிறார். சட்டப்படி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை போலும்.

ஏற்கனவே 18 வருடங்களாக (ஏதோ இல்லாததை கண்டுபிடிப்பதை போல) ஆராய்ந்து ஏதோ தீர்ப்பை சொன்னார்கள். அதற்கு மேல் என்னய்யா மேல்முறையீடு.. ஒரு வருடம்... அப்படி 18 வருடங்களாக கண்டுபிடிக்காததை எப்படி இந்த ஒரு வருடத்தில் கண்டறிவீர்கள். சரி அப்படியே ஒரு வருடத்தில்(?) ஏதாவது முடிவெடுத்தால் அதை செயல்படுத்துவார்களா என்றால் அதற்கும் உத்தரவாதம் இல்லை. என்ன எழவு இது எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இன்னும் எத்தனை வருடம் தான் தமிழன் காத்துக்கிடப்பான். இதையெல்லாம் பார்த்தால் சில சமயம் நமது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஒருவிதமான வெறுப்புணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.