திரு.மோகன்தாஸ் அவர்களின் பெங்களூரில் இந்தியனாய் இருத்தல் பதிவை படித்த போது, எனக்கும் இது போன்ற அனுபவங்கள் சில நான் பெங்களூரில் இருந்த ஆறே மாதத்தில் பல நடந்தது ஞாபகத்திற்கு வந்தது.
நானும் என் நண்பனும் பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் பேச்சு இளையராஜா இசை மீது திரும்பியது. நானும் என் நண்பனும் இருவருமே இளையராஜா ரசிகர்கள் என்பதால் அவரைப் பற்றி பெருமையாகவும், அவரின் சில அற்புத தமிழ் சினிமா பாடல்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். தீடீரென் என் அருகில் இருந்த ஒரு பயணி, கன்னடத்தமிழில், "நீ இருப்பது கர்நாடகா.. சம்பாரிப்பது கர்நாடகா, பேசறுது மட்டும் தமிழ்நாட்டை பத்தி... ஏன் திரும்பி தமிழ் நாட்டுக்கே போக வேண்டியது தானே" என்று செல்லமாக மிரட்டினார். அப்போது தான் நாங்கள் பயணித்து கொண்டிருக்கும் சூழ்நிலையை நான் உணர்ந்தேன். என் நண்பன் உணர்ச்சிவசப்பட்டு இந்தியா, சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டான். ஏதாவது பிரச்சனையானால் எங்களுக்கு ஒரு ஆதரவு வார்த்தைக் கூட கிடைக்காது என்பதை உணர்ந்த நான் என் நண்பனை அடக்கி கூட்டி வந்தேன்.
இன்னொரு சம்பவம், அதற்கு முன்னால் ஒரு சின்ன நோட். நான் கன்னடம் தெரியாத, கால்குறை இந்தி (இப்போ அரைகுறை.. நண்பர்கள் மூலமா கத்துக்கிறேன்) , தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த தமிழன். அன்று என் பைக்கில் எங்கோ பெங்களூரின் வடபகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. நண்பன் குத்துமதிப்பாக வழி சொல்லியிருந்தாலும் சரியாக தொலைந்து விட்டேன். சரி என்று வழியில் போனவரை மடக்கி முகவரியைச் சொல்லி வழி கேட்டால் அவர் தெளிவாக கன்னடாவில் விளக்க ஆரம்பித்தார். அவரை தடுத்து அய்யா நமக்கு கன்னடம் தெரியாது என்று சொன்னேன். என்னை ஒரு 5 வினாடிகள் உற்று பார்த்துவிட்டு தமிலா?? என்றார். ஆமாம் என்று சொன்னேன். உடனே, போய் தமிழ்நாட்டுல போய் அட்ரஸ் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு ஒரு எரிச்சல் பார்வை பார்த்தபடி நடையைக் கட்டினார்.
அதன்பிறகு நான் எப்போதும் பெங்களூரில் வசிப்பதை விரும்பியதில்லை. இதுகுறித்து நான் பல தடவை பெங்களூர்வாழ் தமிழ் நண்பர்களிடம் பேசியபோது அவர்கள் என் கருத்தை மறுத்தே வந்தனர். நாங்கள் பல வருடங்களாக இங்கு உள்ளோம் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என சொல்வார்கள். சிலசமயம் நான் தான் தவறான எண்ணம் வைத்துள்ளேனோ? என்று கூட எண்ணியதுண்டு. இன்று திரு.மோகன்தாஸ் பதிவை பார்த்த போது, என் எண்ணத்தில் எந்த தவறும் இல்லை என்று விளங்கியது.
சரி, அதற்கு ஏன் இந்த தலைப்பு என்கிறீர்களா? இதே கருத்தை நான் ஒரு வட இந்திய நண்பனிடம் ஏதோ ஒரு விவாதத்தின் மீது சொன்ன போது அவன் நக்கலாய் சிரித்தபடி, மெட்ராஸில் நான்- டமிலியன்ஸ எப்படி ட்ரீட் பண்ணுவாங்க தெரியுமா என்றான். மேலும் நடந்த விவாத்தில், அடுத்த மாநில மக்களின் நம் தமிழ்நாட்டை/சென்னையை பற்றிய எண்ணங்கள்
1) தமிழ்நாட்டில் தமிழரல்லாதோர் வாழமுடியாது
2) இந்தியையும், இந்தியாவையும், மற்ற மாநிலத்தவர்களையும் வெறுப்பவர்கள். தனிநாடு கேட்பவர்கள்.
3) மரியாதை தெரியாதவர்கள். யாரையும் மரியாதையாக விளிக்கமாட்டார்கள்
4) சென்னை ஆட்டோஒட்டுநர்கள் ஏமாற்று பேர்வழிகள்
5) தமிழரல்லாதோர் இந்தியில் பேசினால், இந்தி தெரிந்தாலும் தமிழில் தான் பதில் சொல்வார்கள்.
6) சென்னை, ஒரு மக்கள் வாழமுடியாத காலநிலையை கொண்டுள்ளது
7) தமிழரல்லதோர், சென்னையில் வசிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியே கட்டாயம் ஏற்பட்டாலும் அதை ஒரு தண்டனையாகத்தான் நினைப்பார்கள்.
என்னால் இது போன்ற கருத்துக்களை ஒப்புக்கொள்ளவே / ஜீரணிக்கவே முடியவில்லை. எனக்கு தமிழ்நாடும் சென்னையும் சொர்க்கம். நீங்கள் எண்ணுவது தவறு என்று அவருக்கு விளக்க பலமாக முயற்சித்தேன். விவாதத்தின் முடிவில், பிறமாநிலத்தவர் தமிழகத்தை பற்றி இப்படி தான் எண்ணுகிறார்கள் அவர்களின் எண்ணங்களை மாற்றுவது மிகக் கடினம் என்பதை மிகுந்த மன பாரத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் இந்தியா... பல கலாச்சாரம், இனம், மதம், மொழி இருப்பதால் பிரச்சனை ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்துகொண்டே தான் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியில்லை..